'செட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையுடன் முடிகிறது அவகாசம்

உதவி பேராசிரியர் பணிக்கான, 'செட்' தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம், நாளையுடன் முடிகிறது. அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல்
கல்லுாரிகள் மற்றும் இன்ஜினியரிங் கல்லுாரிகளில், உதவி பேராசிரியராக பணிபுரிய, மத்திய அரசின், 'நெட்' அல்லது மாநில அரசின், 'செட்' தகுதி தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். இதில், தேர்ச்சி பெறாதவர்கள், யு.ஜி.சி., விதிகளின்படி, பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பை முடிக்க வேண்டும்.



தமிழகத்தில், மாநில அரசின், 'செட்' தகுதி தேர்வு, தமிழக அரசால், பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டது. மாநில அரசு சார்பில், கொடைக்கானல், தெரசா பல்கலை மூலம், ஏப்., 23ல் தேர்வு நடக்கிறது. தேர்வுக்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, பிப்., 12ல் துவங்கியது. 'செட்' இணையதளத்தில், விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, நாளைக்குள் வழங்க வேண்டும். நாளைக்குள் விண்ணப்பிக்காதோர், தாமத கட்டணம், 300 ரூபாயுடன், மார்ச், 19க்குள் விண்ணப்பிக்கலாம் என, தெரசா பல்கலை தெரிவித்துள்ளது.