'டெட்' தேர்வு அறிவிப்பு : ஆசிரியர்கள் குழப்பம்

ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவிப்பும், பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகக் குறிப்பும், 'டெட்' தேர்வு குறித்த குழப்பத்தை அதிகரித்துள்ளன. மூன்றாண்டுகளுக்கு பின், 'டெட்' எனப்படும், ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏப்., 29, 30ல், இரு நாட்கள் தேர்வு நடக்கிறது. அதற்கான விண்ணப்ப
வினியோகம், 6ல் துவங்கியது. வரும், 22 வரை விண்ணப்பம் பெறலாம்; 23க்குள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ஒப்படைக்க வேண்டும். இது குறித்து, டி.ஆர்.பி., வெளியிட்ட அறிவிக்கையில், 2011 நவ., 15ம் தேதியிட்ட அரசாணைப்படி, டெட் தேர்வு நடத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், பள்ளிக்கல்வி இயக்குனர் வெளியிட்ட சுற்றறிக்கையில், '2010 ஆக., 23க்கு பின், அரசு பள்ளிகளில் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், டெட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெறாதவர்கள், பணியிலிருந்து விடுவிக்கப்படுவர்' என, எச்சரித்துள்ளார்.அதனால், ஆசிரியர்கள் கடும் குழப்பம் அடைந்துள்ளனர்.
இது குறித்து, தமிழ்நாடு உயர், மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகி, இளங்கோ கூறுகையில், ''டெட் தேர்வே, 2011க்கு பின் தான், தமிழகத்தில் நடத்தப்படுகிறது. 2010 முதல், பணியில் சேர்ந்தவர்கள், எப்படி தேர்வு எழுத முடியும். இது குறித்து, பள்ளிக்கல்வித் துறை தெளிவான விளக்கம் தர வேண்டும்,'' என்றார்.