மின் இணைப்பு பெயர் மாற்றம்: விரைவில் இணையதள சேவை

மின் இணைப்பு பெயர் மாற்றத்தை, இணைய தளம் மூலம் மேற்கொள்ளும் சேவையை, தமிழ்நாடு மின் வாரியம் விரைவில் துவக்க உள்ளது. தமிழகத்தில், மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய, மின் வாரிய பிரிவு அலுவலகத்தில்
விண்ணப்பம் அளிக்க வேண்டும். அதனுடன், பெயர் மாறியுள்ள சொத்து பத்திரம், சொத்து வரி ரசீது, வாரிசு சான்றிதழ் என, ஏதேனும் ஓர் ஆவண நகலுடன், கட்டணம் செலுத்த வேண்டும்.
அதை பரிசீலித்து, உதவி பொறியாளர், மின் பயன்பாடு கணக்கீட்டு அட்டையில், புதிய பெயரை, ஏழு நாட்களுக்குள் மாற்றி தர வேண்டும். ஆனால், பெயர் மாற்ற செல்வோரை, பிரிவு அலுவல ஊழியர்கள், அலைக்கழிப்பு செய்வதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அதை இணையதளத்தில் மேற்கொள்ளும் வசதியை துவக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. 

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிய மின் இணைப்பு பெற முடியாமல், மக்கள் பாதிக்கப்படுவதாக புகார்கள் வந்தன. முறைகேட்டை தடுக்க, புதிய மின் இணைப்பு, மின் இணைப்பு மாற்றம், தற்காலிக மின் இணைப்பு ஆகியவற்றுக்கு, இணையதளத்தில் விண்ணப்பிக்கும் சேவை துவங்கப்பட்டது. இந்த முறையில், அனைத்து விபரமும், கம்ப்யூட்டரில் பதிவாவதால், விரைவாக மின் இணைப்பு வழங்கப்படுகிறது. அதற்கு, மக்களிடமும் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. எனவே, மின் இணைப்பு பெயர் மாற்றத்தையும், இணையதளத்தில் மேற்கொள்ளும் சேவை, விரைவில் துவக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.