விடைத்தாள் திருத்தும் பணி குளறுபடி தவிர்க்க கட்டுப்பாடு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி ஏற்படாமல் தவிர்க்க தேர்வுத்துறை புது கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பத்தம் வகுப்பு தேர்வு மார்ச் 28 ல் முடிந்தது; இன்று பிளஸ் 2 தேர்வு முடிகிறது. இன்றே விடைத்தாள் திருத்தும் பணியும் துவங்குகிறது. கடந்த காலங்களில் பல குளறுபடிகள் அரங்கேறின. விடைக்குறிப்பின்படி வழங்கப்பட்ட அதிகபட்ச மதிப்பெண்ணை விட, விடைத்தாளில் கூடுதல் மதிபெண் கொடுத்தது, 


சில பக்கங்களை திருத்தாமலும், மதிப்பெண்ணை அதற்குரிய 'காலத்தில்' எழுதாமலும் விட்டது என பல தவறுகள் தெரியவந்தன. இதை சிலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெற்று ஊடகங்களில் வெளியிட்டனர். இதனால் தேர்வுத் துறைக்கு அவப்பெயர் ஏற்பட்டது.தற்போது, 'முதன்மைத் தேர்வர்கள், கூர்ந்தாய்வாளர்கள் விழிப்புடன் கவனிக்க வேண்டும்' என, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.மேலும், ஒரு முதன்மைத் தேர்வாளர் கட்டுப்பாட்டில், 10 உதவி தேர்வாளர்கள் மட்டுமே விடைத்தாள்களை திருத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.