ரேஷன் கார்டில் முகவரி மாற்றம் இ - சேவை மையத்தில் பெறலாம்

விரைவில் வழங்க உள்ள, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டில், முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை, இணையதளம் மற்றும், அரசு இ - சேவை மையங்களில் செய்து கொள்ளலாம்.தமிழகத்தில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல்; முகவரி மாற்றம்; பிழை திருத்தம் உள்ளிட்ட பணிகள், உணவு வழங்கல் உதவி ஆணையர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகத்தில் மேற்கொள்ளப்படுகிறது. அங்குள்ள ஊழியர்கள், மக்களை, அலைக்கழிப்பதாக கூறப்படுகிறது. 




ஏப்., 1 முதல், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளது. அதில், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள், இணையதளம் மூலம் மட்டுமே மேற்கொள்ளப்படும்.

இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: 'ஆதார்' கார்டில் உள்ள பெயர், முகவரி அடிப்படையில் தான், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்படும். அதில், பிழைகள் இருப்பின், ரேஷன் கார்டுதாரர், தாங்களாகவே, 'டி.என்.பி.டி.எஸ்.டாட் காம்' என்ற இணையதளத்தில் சரி செய்து கொள்ள, மார்ச், 20 வரை அவகாசம் வழங்கப்பட்டது.தற்போது, கார்டுகள் அச்சிடும் பணி நடந்து வருகிறது. எனவே, பிழை இருப்பவர்கள், கவலை அடைய வேண்டாம். அவர்கள், ஸ்மார்ட் கார்டு பெற்ற பின், வீட்டில் இருந்தபடியே, பி.டி.எஸ்., இணையதளத்தில் தாங்களாகவோ அல்லது அரசு, இ - சேவை மையங்களிலோ, சரி செய்து கொள்ளலாம். பிழை திருத்திய கார்டை, தேவைக்கு ஏற்ப, இ - சேவை மையங்களில் பெற்று கொள்ளலாம். கூடுதல் கார்டுக்கு, அந்த மையம் நிர்ணயித்துள்ள கட்டணத்தை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


ஏப்., 1ல் துவக்கம் : சென்னையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. அதனால், திருவள்ளூர் மாவட்டம், அம்பத்துாரில், 'ஸ்மார்ட்' கார்டு வினியோகம் மற்றும் பொது வினியோக திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தையும், முதல்வர் பழனிசாமி, ஏப்., 1ல் துவக்கி வைக்கிறார்.