ஆன்லைன் முன்பதிவு அதிகரிப்பால் ரயில் நிலைய கவுன்டர்கள் குறைப்பு

ரயில் பயணத்திற்கு, ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் மூலம், டிக்கெட் முன்பதிவு செய்வது அதிகரித்துள்ளதால், முக்கிய ரயில் நிலையங்களில், டிக்கெட் கவுன்டர்களின்
எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகிறது. ரயிலில் பயணம் செய்ய, இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி.,யின் இணையதளம் மூலமாக, ஆன்லைனில், டிக்கெட் முன்பதிவு செய்யலாம். மொபைல் போன், 'ஆப்' மூலமும், முன்பதிவு செய்ய முடியும். இதனால், ரயில் நிலையங்களில் உள்ள, முன்பதிவு கவுன்டர்களுக்கு வந்து, டிக்கெட் முன்பதிவு செய்வோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதையடுத்து, ரயில் நிலையங்களில் உள்ள, டிக்கெட் கவுன்டர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில், 2016 நவம்பர் முதல், தற்போது வரை, 21 கவுன்டர்கள்; எழும்பூரில், மூன்று கவுன்டர்கள் மூடப்பட்டுள்ளன. இதேபோன்று, தமிழகம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்களிலும், ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட உள்ளது.