பிஎஸ்-3 வாகனங்களும், தள்ளுபடியும்: அறிய வேண்டிய 10 முக்கிய அம்சங்கள்

புது தில்லி: பிஎஸ்-3 வாகனங்களை ஏப்ரல் 1ம் தேதி முதல் விற்பனை மற்றும் வாகனப் பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பது இந்திய வாகன உற்பத்தித் துறையை ஆட்டம் காண வைத்திருக்கிறது.

மிகவும் பரபரப்பான இந்த நாளில் பிஎஸ் (பாரத் ஸ்டேஜ்) பற்றி நாம் அறிய வேண்டிய 10 அம்சங்கள் பற்றி பார்க்கலாம்.
பாரத் ஸ்டேஜ் அல்லது பிஎஸ் என்பது வாகனங்களுக்காக மத்திய சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு வாரியம் அமைத்த விதிமுறையாகும். வாகன எஞ்ஜினில் இருந்து வெளியேறும் புகை, காற்று மாசை உண்டாக்கும் அளவை குறிக்கும் வகையில் பிஎஸ் அளவில் மாறுபாடு ஏற்படுகிறது. தற்போது பிஎஸ்-3 என்ற அளவை மேலும் கடுமையாக்கி பிஎஸ்-4 என்ற விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது.
இதுமேலை நாடுகளால் ஏற்கனவே பின்பற்றப்பட்டு வரும் நடைமுறைதான்.
2000-ஆவது ஆண்டில் தான் இந்தியாவில் இந்த விதிமுறை நடைமுறைக்கு வந்தன. அப்போதே ஐரோப்பிய நாடுகள் யூரோ 1, யூரோ 2 என்ற விதிமுறைகளை பின்பற்றி வந்தன. 2005ம் ஆண்டில் பிஎஸ்-2ம் விதிக்கும், 2010ம் ஆண்டில் பிஎஸ்-3ம் விதிமுறைக்கும் இந்தியா மாறியது.
ஐரோப்பிய நாடுகள் தற்போது யூரோ 6 என்ற கோட்பாட்டை ஏற்கனவே கடைபிடிக்கத் தொடங்கி விட்ட நிலையில், இந்தியா மிகவும் பின்தங்கி உள்ளது. இப்போதுதான் பிஎஸ்-3க்கு மூடுவிழா நடந்துள்ளது.
இந்த தாமதத்தைக் குறைக்கும் வகையில், பிஎஸ்-4ஐத் தொடர்ந்து பிஎஸ்-5ஐ கைவிட்டுவிட்டு பிஎஸ்-6ஐ 2020ல் பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கேற்ற வகையில் வாகன உற்பத்தி மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது.
டூ-ஸ்டுரோக் வாகனங்களைத் தொடர்ந்து தற்போது பிஎஸ்-3 வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வகை வாகனங்களின் விற்பனை மற்றும் வாகனப் பதிவுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விற்பனையான வாகனங்களை ஓட்டுவதற்கு எந்த தடையும் இல்லை.
பிஎஸ்-3ல் எஞ்ஜினை இயக்கும் போது வெளியாகும் புகையைக் எலக்ட்ரானிக் முறையில் கட்டுப்படுத்துவது அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போது பிஎஸ்-4ல் வாகனம் நிறுத்தப்பட்டிருக்கும் போது, பெட்ரோல் மற்றும் டீசல் ஆவியாவதும் குறைக்கப்படும். எனவே, பிஎஸ்-4 விதிமுறையை பின்பற்றி வாகனம் தயாரிக்கும் தொழிற்சாலைகள், எரிபொருள் ஆவியாவதைக் கட்டுப்படுத்தும் யூனிட்டையும் அமைக்க வேண்டும்.
இந்த புதிய நடைமுறையால் நிச்சயம் சுற்றுச்சூழல் மாசடைவது கட்டுப்படுத்தப்படும் என்றாலும், வாகனங்களின் உற்பத்திச் செலவு அதிகரித்து அதன் மூலம் வாகனங்களின் விலையும் அதிகரிக்கும்.
சுசூகி, ஹூண்டாய், பஜாஜ் ஆகிய ஆட்டோமொபைல் உற்பத்திக் கூடங்கள் ஏற்கனவே பிஎஸ்-4க்கு மாறிவிட்டன. மற்ற நிறுவனங்கள் தற்போது ஆராய்ச்சி - மேம்பாடு அல்லது மாற்றத்துக்கான ஆரம்ப நிலையில் உள்ளன.
மார்ச் 20ம் தேதி நிலவரப்படி, உற்பத்தியாகி விற்பனையாகாமல் இருந்த பிஎஸ்-3 வாகனங்களின் எண்ணிக்கை 8,24,275. இவை அனைத்தும் ஏப்ரல் 1ம் தேதிக்குள் விற்று முடிக்கப்படாது என்று டீலர்கள் கூறுகிறார்கள்.