பிளஸ் 2 கணினி அறிவியல் தேர்வில்,
வினாத்தாளில் தேர்வு எழுதும் 'நேரம்' தவறாக குறிப்பிடப்பட்டிருந்ததால்
மாணவர்கள் நேற்று குழப்பம் அடைந்தனர்.
இத்தேர்வில் மொத்தம் 150க்கு 75 மதிப்பெண்
வினாக்கள் 'அப்ஜெக்டிவ்' வகையாகவும், 75 மதிப்பெண்ணுக்கான வினாக்கள்
'தியரி'யாகவும் கேட்கப்படும். முதல் 75 வினாக்கள் ஒரு மதிப்பெண் வகை.
அதற்கான விடைகளை தேர்வு அறையில் வழங்கப்படும் ஓ.எம்.ஆர்., ஷீட்டில் கருப்பு
மை பால் பாயின்ட் பேனாவால் நிரப்ப வேண்டும். இப்பகுதியை மாணவர்கள்
எழுதுவதற்கு கடந்தாண்டு முதல் 90 நிமிடங்கள் வழங்கப்பட்டன.
ஆனால் நேற்று நடந்த தேர்வில் 'ஓ.எம்.ஆர்.,
ஷீட்'டில் ஒரு மதிப்பெண் பகுதிக்கு '75 நிமிடங்கள்' என குறிப்பிடப்பட்டதால்
குழப்பம் ஏற்பட்டது.இத்தேர்வு தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர்களுக்கு,
தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி அனுப்பிய சுற்றறிக்கையிலும், 'ஒரு
மதிப்பெண் பகுதிக்கு 90 நிமிடங்கள் ஒதுக்க வேண்டும்,' என தெளிவாக
குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், '75 நிமிடங்கள்' என
அச்சிடப்பட்டிருந்ததால், ஆசிரியர்களும் குழப்பமடைந்தனர்.
சென்னை தேர்வுத்துறை அதிகாரிகளிடம்
இதுகுறித்து கேட்டபோது, 'நேரம் தவறாக அச்சிடப்பட்டதாகவும், 90 நிமிடங்கள்
தான் வழங்க வேண்டும். அதன் பின் ஓ.எம்.ஆர்., ஷீட்டை மாணவர்களிடம் அறை
கண்காணிப்பாளர் பெற வேண்டும்,' என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கணினி அறிவியல் ஆசிரியர் ஒருவர் கூறுகையில்,
"இத்தேர்வுக்கு 2015-16ல் ஒரு மதிப்பெண் பகுதிக்கு 75 நிமிடங்கள்
ஒதுக்கப்பட்டன. இதற்கு, நேரம் குறைவாக இருப்பதாக மாணவர்கள் கடும் எதிர்ப்பு
தெரிவித்ததால் 2016-17ல், இப்பகுதி எழுத 90 நிமிடங்களாக நேரம்
அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தாண்டு '75 நிமிடங்கள்' என தவறாக
அச்சிடப்பட்டதால்குழப்பம் ஏற்பட்டது. மாணவர்கள் பாதிக்கவில்லை," என்றார்.
மாணவர்கள் எதிர்பார்ப்பு
மாணவர்கள் கூறுகையில், "ஒரு மதிப்பெண்
பகுதியை எழுதி முடித்த 90 நிமிடங்களில், ஓ.எம்.ஆர்., ஷீட்டை அறை
கண்காணிப்பாளர் வாங்கிக்கொள்கிறார். இதன்பின் தியரி பகுதி எழுத
அனுமதிக்கப்படுகிறது. பிற தேர்வுகளில், அனைத்து வினாக்கள் பகுதியும் எழுதி
முடித்த பின், விடைத்தாளை கண்காணிப்பாளரிடம் ஒப்படைப்பது போல்,
இத்தேர்விலும் தியரி எழுதி முடிக்கும் வரை ஓ.எம்.ஆர்., ஷீட்டை மாணவர்கள்
வைத்திருக்க அனுமதிக்க வேண்டும்," என்றனர்.