ரூ. 2,000 நோட்டுகளை பதுக்கினால் செயற்கைக்கோளில் கண்காணிக்கலாம்: இஸ்ரோ விஞ்ஞானி


ரூ. 2,000 நோட்டுகளை பதுக்கினால் செயற்கைக்கோள் மூலமாகக் கண்காணிக்க முடியும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) நிகழ்வு இயக்குநர் வி.ரெங்கநாதன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்க வந்த அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
உலகம் முழுவதும் பொறியியல் துறை மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்று வருகிறது. காற்றில் மணிக்கு 1,200 கி.மீ. வேகத்துக்குச் செல்லும் வாகனத்தை அமெரிக்கா கண்டுபிடித்துள்ளது. அதேபோல, முப்பரிமாண கட்டுமானம் எனும் புதிய தொழில்நுட்பத்தை ரஷியா அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்தொழில்நுட்பம் மூலமாக 12 மணி நேரத்தில் வீடு கட்ட முடியும்.
இஸ்ரோவில் விண்கலத்துக்குத் தேவையான சிறிய உபகரணங்கள் முப்பரிமாண தொழில்நுட்பத்தில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. சூரிய வெப்பத்தில் உள்ள ஒரு சதவீத ஆற்றலைப் பயன்படுத்தினால் உலக நாடுகளுக்குத் தேவையான மின்சாரத்தைப் பெற முடியும். ஆனால், சூரிய ஒளி ஆற்றலில் மின்சாரம் தயாரிக்க அதிக செலவாகிறது.
சூரிய ஒளி மின் தகடுகளில் படும்போது கிடைக்கும் ஆற்றலில் இருந்து 8 சதவீதத்தில் மட்டும்தான் இப்போது மின்சாரம் உற்பத்தி செய்ய முடிகிறது. ஆனால், இஸ்ரோவில் 15 முதல் 20 சதவீதம் வரை மின்சாரமாக உற்பத்தி செய்கிறோம். இந்த சதவீதத்தை உயர்த்துவதற்கான ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரூ. 2,000 நோட்டுகளை பதுக்கினால் செயற்கைகோள் மூலமாக கண்காணிக்க முடியும் என்றார். விழாவில், ஜெர்மனி ஸ்கூப் குழுமத்தின் இயக்குநர் அப்துல் கோமஸ், கல்லூரித் தலைவர் வெ.சண்முகன், செயலர்கள் நந்தகுமார் பிரதீப், திருமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.