ஏப்., 1 வங்கி விடுமுறை : ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை

மும்பை: 'மார்ச், 25 முதல் 31 வரை, விடுமுறையின்றி செயல்பட்ட, அரசின் வரவு - செலவு கணக்குகளை பராமரிக்கும் வங்கி கிளைகள், ஏப்., 1ல் செயல்பட தேவையில்லை' என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மார்ச் 31ம் தேதியுடன் நிதியாண்டு முடிவுக்கு வருவதால், ஆண்டு இறுதிக் கணக்கை முடிக்கும் வகையில், அனைத்து வங்கிகளும் தீவிர கதியில் செயலாற்றி வருகின்றன. இந்நிலையில், 'அரசின் வரவு - செலவு கணக்குகளை பராமரிப்பதில் தொய்வு ஏற்படாமல் இருக்க, அந்தப் பணிகளை மேற்கொள்ளும் வங்கிகள், மார்ச், 25 முதல் 31 வரை, எவ்வித விடுமுறையும் இன்றி, இயங்க வேண்டும்' என, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. மார்ச், 24 இரவில், திடீரென வெளியான இந்த சுற்றறிக்கையால், வங்கி ஊழியர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். எனினும், பணிகளை விரைந்து முடிப்பதற்காக, வார விடுமுறை மற்றும் யுகாதி பண்டிகை விடுமுறையும் எடுக்காமல், பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், 'அரசின் வரவு - செலவு கணக்குகளை பராமரிக்கும் வங்கிகள், ஏப்., 1ல் செயல்படத் தேவையில்லை' என, ஆர்.பி.ஐ., புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்ச், 25 முதல் 31 வரை, விடுமுறையின்றி செயல்பட்ட வங்கி கிளைகள், ஏப்., 1ல் செயல்பட தேவையில்லை என்பதால், அந்த கிளைகளில் பணியாற்றும் ஊழியர்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.