அச்சிட்ட 'டெட்' தேர்வு விண்ணப்பங்கள் சிறிய மாறுதலுடன் பயன்படுத்த முடிவு

ஆசிரியர் தகுதித் தேர்வான, 'டெட்'டுக்காக, அச்சிட்ட விண்ணப்பங்களில், கூடுதலாக சில வரிகளை சேர்த்து பயன்படுத்த, கல்வித் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வான, 'டெட்' தேர்வை நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,க்கு, தமிழக அரசு உத்தரவிட்டது. அதனால், டி.ஆர்.பி.,
தலைவராக இருந்த விபு நய்யர், 'டெட்' தேர்வுக்கான விண்ணப்பங்களை அச்சிடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்தார். இந்த நேரத்தில், தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனமான, 'டான்சிக்கு' அவர் திடீரென மாற்றப்பட்டார். இந்நிலையில், அச்சிடப்பட்ட, 'டெட்' தேர்வு விண்ணப்பங்களில், சில பகுதிகள் விடுபட்டிருந்ததை, கல்வித் துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். அதனால், 15 லட்சம் விண்ணப்பங்கள் வீணாக குப்பைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. இதுபற்றி, பிப்., ௨௬ல், நமது நாளிதழில் செய்தி வெளியானது. உடன் விசாரணை நடத்த, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டார். 'ஏற்கனவே அச்சிட்ட விண்ணப்பங்களில், கூடுதலாக சில வரிகளை சேர்த்தால், பிரச்னைக்கு தீர்வு காணலாம்' என, அதிகாரிகள் அறிக்கை அளித்தனர். இதையடுத்து, ஏற்கனவே அச்சிட்ட விண்ணப்பங்களுடன், கூடுதலாக சில வரிகளை அச்சிட்டு இணைக்க, கல்வித்
துறை அதிகாரிகளுக்கு, அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.