இன்ஜி., பாடத்திட்டம் மாற்றம் : முதலாம் ஆண்டுக்கு புதிய 'சிலபஸ்'

அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, இன்ஜி., கல்லுாரிகளில், வரும் கல்வி ஆண்டில், முதலாம் ஆண்டுக்கான பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளது. அண்ணா பல்கலை கட்டுப்பாட்டில், 550க்கும் மேற்பட்ட, இன்ஜி., கல்லுாரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லுாரிகளில், சில கல்லுாரிகள் மட்டும் தன்னாட்சி பெற்று, சுயமாக பாடத்திட்டம் தயாரித்து கொள்கின்றன. மற்ற கல்லுாரிகள், அண்ணா பல்கலையின் பாடத்திட்டத்தையே பின்பற்றுகின்றன.
அறிவியல் வளர்ச்சி, புதிய தொழில்நுட்பம், பொருளாதார நிலை, அரசின் கொள்கைகள் அடிப்படையில், பாடத்திட்டங்கள் தயாரிக்கப்படும். இந்த பாடத்திட்டங்கள், நான்குஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றப்படும். அதன்படி, வரும் கல்வி ஆண்டில், இன்ஜி., கல்லுாரிகளின் பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளது. இது குறித்து, கடந்த ஒரு வாரமாக, அண்ணா பல்கலையில், பாடத்திட்ட தயாரிப்புக்கான கல்வி வாரிய கூட்டம் நடந்தது. இதில், வரும் கல்வி ஆண்டில், அனைத்து துறைகளிலும், முதலாம் ஆண்டுக்கு மட்டும் பாடத்திட்டத்தை மாற்றுவதற்கான அம்சங்களை ஆய்வு செய்து, இறுதி செய்தனர்.இதையடுத்து, இறுதி செய்யப்பட்ட பாடத்திட்டம் குறித்து, கல்விக் கவுன்சில் கூடி முடிவு செய்யும். அதன்பின், சிண்டிகேட் மற்றும் அரசு அனுமதியுடன், புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.