அரவைக்கு செல்லும் 7 லட்சம் டி.இ.டி., விண்ணப்பம்-DINAMALAR

மாநிலத்தில் மூன்று ஆண்டுகளாக, ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) நடத்தப்படவில்லை. கல்வி அமைச்சராக பாண்டியராஜன் நியமிக்கப்பட்ட பின், பலராலும் எதிர்பார்க்கப்பட்ட டி.இ.டி., தேர்வு, மார்ச் இறுதியில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். அவரது அறிவிப்பிற்கு பின் சுறுசுறுப்படைந்த டி.ஆர்.பி., தேர்வுக்காக, முதற்கட்டமாக 7 லட்சம் புதிய விண்ணப்பங்களை அச்சிட்டு, பிப்., முதல் வாரத்தில் அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும், குறைந்தபட்சம் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் விண்ணப்பங்கள் வரை அனுப்பி வைத்தது.


 வினியோகம் துவங்கி பிப்.,28க்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, அந்தந்த கல்வி மாவட்டங்களில் ஒப்படைக்க வேண்டும் எனவும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு (சி.இ.ஓ.,க்கள்) டி.ஆர்.பி., உத்தரவிட்டது. இந்நிலையில் டி.இ.டி., தேர்வு குறித்து சி.இ.ஓ.,க்களுக்கான ஆலோசனை கூட்டம் நடத்த டி.ஆர்.பி., ஏற்பாடு செய்தது. அப்போது டி.ஆர்.பி., தலைவர் விபுநாயருக்கும், கல்வி செயலர் சபிதாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடால் அக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து விபுநாயரும் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். 

புதிய உத்தரவு: இந்நிலையில், டி.இ.டி., விண்ணப்பங்களில் இணைக்கப்பட்ட விபரப் பக்கங்களில் பிழை இருப்பதால், அதை வினியோகிக்க வேண்டாம் என டி.ஆர்.பி., திடீர் உத்தரவு பிறப்பித்தது.இதையடுத்து இரு நாட்களுக்கு முன் டி.இ.டி., விண்ணப்பங்களை, அரவைக்கு கொண்டு செல்வதற்காக கரூரில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதம் நிறுவனத்திடம் (டி.என்.பி.எல்.,) ஒப்படைக்க அனைத்து சி.இ.ஓ.,க் களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. டி.ஆர்.பி.,யின் கவனக்குறைவால் அரசுக்கு நிதி விரையம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து டி.ஆர்.பி., அதிகாரி ஒருவர் கூறியதாவது: விண்ணப்பத்தில் சில பிழைகள் இருந்தன. நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, விபரப் பகுதியில் விதிமுறை குறிப்பிடப்படவில்லை. இதை ளியிட்டால் சிலர் நீதிமன்றம் சென்று வழக்கு தொடர வாய்ப்புள்ளது. இதனால் அனுப்பி வைக்கப்பட்ட விண்ணப்ப கட்டுக்களை பிரித்து பார்க்காமலே அவற்றை அரவைக்கு அனுப்பி வைக்க அதிகாரிகளுக்கு டி.ஆர்.பி., உத்தரவிட்டது. புதிய விண்ணப்பம் அச்சடிக்கும் பணி விரைவில் துவங்கும், என்றார்.