பிளஸ் 2 பொதுத்தேர்வு 9.30 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்

பிளஸ் 2 பொதுத் தேர்வில், இந்த ஆண்டு, நான்கு திருநங்கையர் உட்பட, 9.30 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச், 2ல் துவங்குகிறது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன், தேர்வை முறையாக நடத்த, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. இந்த தேர்வில், 9.30 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். இவர்களில், 6,737 பள்ளிகளில் படிக்கும், 4.18 லட்சம் மாணவர்கள்; 4.81 லட்சம் மாணவியர் மற்றும் ஒரு திருநங்கை அடங்குவர்.


தமிழ் வழியில் படிப்போரில், 5.69 லட்சம் பேர், தேர்வில் பங்கேற்கின்றனர். தனித்தேர்வர்களில், 20 ஆயிரத்து, 448 மாணவர்கள்; 11 ஆயிரத்து, 392 மாணவியர் மற்றும் மூன்று திருநங்கையர் என, 31 ஆயிரத்து, 843 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சிறைக் கைதிகள், 88 பேரும், தேர்வில் பங்கேற்கின்றனர். மாநிலம் முழுவதும், 2,427 மையங்களில் தேர்வு நடக்கிறது. தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்'டுகள், அந்தந்த பள்ளி களின் தலைமை ஆசிரியர்கள் மூலம், பதிவிறக்கம் செய்து வழங்கப்பட்டு உள்ளன. தனித்தேர்வர்களுக்கும், தத்கல் விண்ணப்பதாரர்களுக்கும், http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், ஹால் டிக்கெட்டைபதிவிறக்கம் செய்ய வசதி செய்யப்பட்டு உள்ளது.