1 லட்சம் மாணவர்களுக்கு கை கழுவுவது குறித்த பயிற்சி

நோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியாக, முறையாக கை கழுவுவது எப்படி என, ஒரு லட்சம், பள்ளி மாணவ, மாணவியருக்கு, மாநகராட்சி செய்முறை பயிற்சி அளித்தது.

சென்னை மாநகராட்சி சுகாதார கல்வித் துறை சார்பில், நோய் பாதிப்பில் இருந்து தப்புவது குறித்தும், கொசு உற்பத்தி, நோய் உருவாவது எப்படி என்பது போன்ற, பல்வேறு சுகாதார விழிப்புணர்வு தகவல்களை, நகர மக்களுக்குதெரியப்படுத்தி வருகின்றனர்.



பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தி, சுகாதார துாதுவர்களுக்கான, அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, 10 லட்சம் மாணவ, மாணவியருக்கு, சுகாதார துாதுவர்களுக்கான அட்டை வழங்கப்பட்டு உள்ளது.
இந்த தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, நேற்று, நகர் முழுவதும் ஒரே நேரத்தில், ஒரு லட்சம் பள்ளி மாணவ, மாணவியருக்கு, நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்க, முறையாக சோப்பு போட்டு கை கழுவுவது எப்படி என, மாநகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் செய்முறை பயிற்சி அளித்தனர்.

அப்போது, சுகாதாரம் குறித்து பல்வேறு தகவல்களை, மாணவர்களுக்கு, அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, சென்னை மாநகராட்சியில், வார்டுக்கு ஒரு பள்ளி வீதம், மொத்தம், 200 பள்ளிகளில் நடைபெற்றது.