மார்ச்.13 முதல் சேமிப்புக்கணக்கில் கட்டுப்பாடு இன்றி பணம் எடுக்கலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

புது தில்லி: வங்கி சேமிப்புக் கணக்கில் இருந்து இன்று முதல் வாரத்திற்கு 50 ஆயிரம் வரை பணம் எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கருப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கையாக உயர்மதிப்புடைய பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு பதிலாக புதிய 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டன.
ஆனால், தேவைக்கு ஏற்ப புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வராததாலும், சில்லறைத் தட்டுப்பாடு காரணமாகவும், ஏழை-எளிய மற்றும் நடுத்தர மக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வந்தனர். தங்களுடைய வங்கி சேமிப்புக் கணக்கில் உள்ள பணம் எடுப்பதற்காக வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 8-ஆம் தேதி, வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி சேமிப்புக் கணக்கில் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பை தளர்த்தி அறிவித்தது. அதன்படி, வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் வாரத்துக்கு 24 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு தளர்த்தியது.
இன்று முதல் சேமிப்பு கணக்கில் இருந்து வாரத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வரை எடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. மார்ச் 13-ஆம் தேதி முதல் சேமிப்புக்கணக்கில் கட்டுப்பாடு இன்றி பணம் எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.