10 ,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு ரிவிஷன் விடப் போறீங்களா.. சின்ன சின்ன டிப்ஸ் உங்களுக்காக !!

பரீட்சை நெருங்கி வருகிறது... படித்து முடித்து விட்டோம்.. மனதெல்லாம் படபடப்பு. படித்த பாடத்தை ரிவிஷன் செய்ய வேண்டும். இதெல்லாமும்தான் மாணவ, மாணவிகளுக்கு டென்ஷன் தரும் விஷயங்களாகும். ஆனால் பாடங்களை திரும்பிப் பார்ப்பது ஒன்றும் அவ்வளவு பெரிய கஷ்டமான விஷயம் இல்லை.


சின்னச் சின்னதாக சில டிப்ஸ்கள் உள்ளன. அதைக் கடைப்பிடித்தாலே போதும். ஜாலியாக பாடங்களை ரிவிஷன் விடலாம். வாங்க அந்த டிப்ஸ்களை ஒரு பார்வை பார்ப்போம்.
1. டிவி, கம்ப்யூட்டர்கள் இல்லாத இடமாக பார்த்து உட்கார்ந்து ரிவிஷன் செய்யுங்கள். முடிந்தவரை நீங்கள் இருக்கும் இடம் அமைதியாக இருப்பது நல்லது.
2. முதலில் டைம்டேபிள் போட்டுக் கொள்ளுங்கள். எது எதை முதலில் ரிவிஷன் விட வேண்டும் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். மேலும் நீங்கள் எப்போது ரிவிஷனை தொடங்கப் போகிறீர்கள் என்பதை உங்களது வீட்டாருக்கும் தெரியப்படுத்துங்கள்.
3. பாடங்களின் சுருக்கத்தை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு எளிதாக பாடத்தை நினைவில் வைத்துக் கொள்ள உதவும்.
4. நீங்கள் படித்த பாடத்தை சரியாக படித்துள்ளீர்களா என்று அறிய உங்களது குடும்பத்தினரையோ அல்லது நண்பர்களையோ அழைத்து டெஸ்ட் வைக்கச் சொல்லுங்கள். ஆசிரியர்கள் நடத்தும் ரிவிஷன் வகுப்புகளையும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.
5. வாய் விட்டுப் படியுங்கள். படிப்பதை ஆடியோ கேசட்டில் பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதைக் கேட்கும்போது எளிதில் மனதில் பதியும்.
6. படிக்கும்போது ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒருமுறை 10 நிமிடம் பிரேக் எடுத்துக் கொள்ளுங்கள். சின்னதாக வாக்கிங் போங்கள். கண்களை மூடி தியானம் செய்வதை போல அமைதியாக இருங்கள். புத்துணர்ச்சி கிடைக்கும்.
7. தினசரி சிறிது நேரம் ரிலாக்ஸாக இருக்கப் பாருங்கள். அது உங்களை முழுமையாக ரிலாக்ஸ் ஆக்கும். அதேபோல இரவில் 8 மணி நேர தூக்கம் மிக மிக அவசியம்.
8. நல்லா சாப்பிடுங்க. பிடித்ததை சாப்பிடுங்கள். சாப்பிடும்போது படிப்பை பற்றி சிந்திக்காதீங்க. சரியான நேரத்திற்கு சாப்பிடுவது உடலையும், மூளையையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
9. எந்தக் காரணத்தைக் கொண்டும் பரீட்சை குறித்துப் பயப்படாதீங்க. பதட்டம் உங்களை குழப்பி விடும். படித்ததையும் மறக்கடித்து விடும்.
10. எப்போதும் நேர்மறையாகவே சிந்தியுங்கள். எப்போதும் சீரியஸாக இருக்காதீர்கள். நீங்கள் தோல்வி அடைந்தால் உலகமே விழுந்து விடாது. எனவே பதட்டமின்றி இருங்கள்.
தேர்வுக்காக நிச்சயம் தயாராக வேண்டும். ஆனால் உயிரை வெறுத்து அல்ல, மாறாக நமது மனத்தை ஒருநிலைப்படுத்தி, ரிலாக்ஸ்டாக தேர்வுக்குத் தயாராக வேண்டும்.