TET: தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும்

ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதிகாண் மதிப்பெண் முறையை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:


தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் மாத இறுதிக்குள் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பாண்டியராஜன் அறிவித்துள்ளார். தமிழக அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது.


ஆனால் ஆசிரியர்கள் நியமனத்துக்கு தகுதிகாண் மதிப்பெண் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது அநீதியாகும். அதன்படி, தகுதித்தேர்வு மதிப்பெண்ணில் 60 சதவீதம் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். மீதமுள்ள 40 சதவீதம் மதிப்பெண் பிளஸ் 2, பட்டப்படிப்பு, பி.எட். தேர்வு ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்ணைக் கொண்டு கணக்கிடப்படும்.

பள்ளி பொதுத்தேர்வாக இருந்தாலும், பட்டப்படிப்பாக இருந்தாலும் 10 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்டதைவிட தற்போது தாராளமாக மதிப்பெண் வழங்கப்படுகிறது. இதனால் அண்மையில் ஆசிரியர் படிப்பை முடித்தவர்களின் தகுதிகாண் மதிப்பெண் அதிகமாக இருக்கும் என்பதால் அவர்கள் எளிதாகத் தேர்ச்சி பெறுவர்.


ஆனால், 10 ஆண்டுகளுக்கு முன்பு படித்தவர்கள் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றாலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அவர்கள் பெற்ற மதிப்பெண் குறைவு என்பதால் அவர்களுக்கு வேலை கிடைக்காது.


பள்ளி மற்றும் கல்லூரித் தேர்வு மதிப்பெண்ணில் நம்பிக்கை இல்லாமல்தான் தகுதித் தேர்வு முறை கொண்டு வரப்பட்டது. தற்போது தகுதித் தேர்வு மதிப்பெண்ணில் 60 சதவீத மதிப்பெண்ணையும், பள்ளி மற்றும் கல்லூரித் தேர்வுகளில் 40 சதவீத மதிப்பெண்ணையும் எடுத்துக் கொள்வது என்பது கேலிக்கூத்தானது. இது தகுதித் தேர்வு கொண்டு வரப்பட்டதன் அடிப்படை நோக்கத்தையே சிதைத்துவிடும்.


எனவே, ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்துவிட்டு தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.