டி.டி.சி., தேர்ச்சி பெறாத பகுதி நேர ஆசிரியர்கள் நீக்கம்?

அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட்ட, பகுதி நேர ஆசிரியர்களில், பயிற்சி முடிக்காதவர்களை பணி நீக்கம் செய்ய, கல்வித் துறை பரிசீலித்து வருகிறது.

தமிழக அரசு பள்ளிகளில், தொகுப்பூதிய அடிப்படையில், 2012ல், பகுதி நேர சிறப்பாசிரியர்களாக, 16 ஆயிரத்து, 500 பேர் நியமிக்கப்பட்டனர். தையல், ஓவியம், இசை, நடனம், கணினி அறிவியல், தோட்டக்கலை உள்ளிட்ட, பல சிறப்பு பாடங்களை நடத்துகின்றனர்.



இந்நிலையில், பணி நிரந்தரம் செய்யக் கோரி, பகுதி நேர ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேநேரம், பகுதி நேர ஆசிரியர் நியமனத்தில், தகுதியில்லாதவர்கள் இருப்பதாக, குற்றச்சாட்டுகள் எழுந்தன.


அவர்களில், நுாற்றுக்கணக்கானோர், தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என, தெரிய வந்துள்ளது. இதையடுத்து, உரிய கல்வித்தகுதி பெறாதவர்களை, பணி நீக்கம் 
செய்வது குறித்து, அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகள் ஆலோசித்து 
வருகின்றனர்