பொதுத்தேர்வு மாணவர்களுக்கு 'சென்டம்' மதிப்பீட்டில் வருகிறது கடும் கட்டுப்பாடு

அரசு பொதுத்தேர்வில், 'சென்டம்' வழங்கும் மதிப்பீட்டு முறையில், கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட உள்ளன. மார்ச், 2ல், பிளஸ் 2வுக்கும், மார்ச், 8ல், 10ம் வகுப்புக்கும் பொதுத் தேர்வுகள் துவங்க உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகளில், தமிழக கல்வித்துறை ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், பொதுத் தேர்வு விடைத்தாள்களை மதிப்பிடும் முறையில், பல மாற்றங்கள் வர உள்ளன.
கடந்த ஆண்டில், சில கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. இந்த ஆண்டு, இன்னும் கூடுதல் நிபந்தனைகளை கொண்டு வர, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. மதிப்பீட்டு முறையில், ஆசிரியர்கள் கவனமின்றி செயல்படுவதால், அதிக அளவில், 'சென்டம்' வழங்கப்படுகிறது.
கல்லுாரிகளில் இவர்கள், பிளஸ் 2 மதிப்பெண்களை விட, குறைந்த அளவே கல்வித் திறன் உள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. அதனால், மதிப்பீட்டு முறையில் மிக கவனமாக இருந்தால் மட்டுமே, தகுதியான மாணவர்களுக்கு, 'சென்டம்' கிடைக்கும்.
எனவே, மொழித்தாள்கள் மற்றும் முக்கிய பாடத்தாள்களில், 'சென்டம்' வழங்குவதாக இருந்தால், அவர்களின் விடைத்தாளை, பல கட்ட ஆய்வு செய்த பின், மதிப்பெண்ணை இறுதி செய்ய தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.
இதற்கான வழிமுறைகள், ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல் கூட்டத்திலும், கையேட்டிலும் வழங்கப்பட உள்ளதாக, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.