ஏப்ரல் மாதம் 30ம் தேதிக்குள் டெட் தேர்வு இதற்கான அறிவிப்பு இரண்டு நாட்களில் வெளியாகும் & 3300 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வரும்-பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜன்

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் மாதம் 30ம் தேதி  நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளதாக பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் தனியார் நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜனிடம் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து
நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, அவர் கூறியதாவது:
ஏற்கனவே நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அதிக அளவில் உள்ளனர். அதனால் தகுதித் தேர்வு நடத்த தேவை இருக்காது என்று எண்ணினோம். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் தேர்வு நடத்த வேண்டும் என்று விதி உள்ளதால், இந்த ஆண்டு, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) ஏப்ரல் 30ம் தேதிக்குள் நடக்கும்.

இதற்கான அறிவிப்பு இரண்டு நாட்களில் வெளியாகும். இது தவிர, மேனிலைப் பள்ளிகளில் ஏற்கனவே 1800 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த ஆண்டு மே மாதம் மேலும் 1500 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஓய்வு பெற உள்ளனர். அவற்றையும் சேர்த்து 3300  முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வும் நடக்கும்.