பிளஸ் 2 செய்முறை தேர்வில் முறைகேடுக்கு இடம் கூடாது

'பிளஸ் 2 செய்முறை தேர்வில், முறைகேடுக்கு இடமின்றி, வினாத்தாள் தயாரிக்க வேண்டும்' என, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, தேர்வுத் துறை இயக்குனர், எச்சரிக்கை விடுத்துள்ளார்.பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச் 2ல் துவங்கி, 31ல் முடிகிறது. தேர்வுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், தேர்வுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இதில், 'தியரி' என்ற கருத்தியல் தேர்வுடன், அறிவியல் சார்ந்த செய்முறை தேர்வும் நடத்தப்படும்.
இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், நுண் உயிரியல், நுண் வேதியியல், நர்சிங், ஊட்டச்சத்து மற்றும் உணவு பதப்படுத்துதல், இல்ல அறிவியல், இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் உள்ளிட்ட பாடங்களுக்கு, செய்முறை தேர்வு நடத்தப்படும். இத்தேர்வு, பிப்., 2 முதல், அந்தந்த பள்ளி ஆய்வகங்களில் துவங்குகிறது.

இதுகுறித்து, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி பிறப்பித்த உத்தரவு: தேர்வின்போது, வேறு பள்ளி கண்காணிப்பாளர்களை பணியில் அமர்த்த வேண்டும். செய்முறை உபகரணங்களை, மாணவர்களுக்கு முறையாக வழங்க வேண்டும். செய்முறை தேர்வுக்கான, 'ரெக்கார்ட்' புத்தகங்களை மாணவர்களிடம் பெற்று, மதிப்பெண் வழங்க வேண்டும். தேர்வில் எந்த மாணவருக்கும், முறைகேடாக கூடுதலாகவோ, குறைத்தோ மதிப்பெண் வழங்கக் கூடாது. இவ்வாறு அவர் எச்சரித்துள்ளார்.