காவல் துறை பணி முன்னாள் படைவீரர்கள் பிப்.22-க்குள் விண்ணப்பிக்கலாம்

முன்னாள் படைவீரர்கள் பயனடையும் வகையில், காவல் துறை பணியிடங்களில் அவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளதால், இப்பணியிடங்களுக்கு அவர்கள் வரும் பிப்.22 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ப.மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.


தமிழகம் முழுவதும் சிறப்பு காவல் படை, இரண்டாம் நிலைக் காவலர், ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துணை தீயணைப்போர் உள்ளிட்ட பணியிடங்களில் முன்னாள் படைவீரர்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, மாநில அளவில் 15,664 காவல் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாகவும் அரசு அறிவித்துள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு, 10 -ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றும், 45 வயதுக்குள்ளும் இருக்கும் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், வரும் பிப்.22 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், இதுகுறித்த விவரங்களை www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.