புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்கள் செல்லும்: இந்திய ரிசர்வ் வங்கி

நாட்டில் புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்கள் செல்லுபடியாகும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற தவறான தகவல் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகிறது என்றும், இதை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்திய அரசால் தயாரிக்கப்பட்ட நாணயங்களை இந்திய ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விடுகிறது. ரூபாய் நோட்டுகளைவிட நாணயங்கள் நீண்ட காலத்திற்குப் புழக்கத்திலிருக்கும் என்பதால் ஒரே மதிப்பில் வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் நாணயங்கள் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில், தற்போது புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்களிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டு அவை வெளியிடப்படுகின்றன.
கடந்த 2010 ஜூலை 15 -ஆம் தேதி புதிதாக ரூபாய் சின்னம் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 10 ரூபாய் நாணயங்களும் அந்த குறியீட்டுடன் தயாரிக்கப்பட்டன. ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்களிலிருந்து அவை சற்றே மாறுபட்டுத் தோன்றினாலும், இரண்டுமே சட்டப்படி செல்லுபடியாகும். மேலும் இத்தகைய நாணயங்கள் அனைத்துவிதமான பரிவர்த்தனைகளுக்கும் ஏற்றுக்கொள்ளப்படும்.
எனவே பொதுமக்கள் இதுகுறித்து வரும் வதந்திகளை புறக்கணித்து, 10 ரூபாய் நாணயங்களை தொடர்ந்து பயன்படுத்தலாம் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.