கண்துடைப்பாகும் 'SLAS' தேர்வுகள் : 'சர்வே' முடிவால் சறுக்கும் கல்வித்துறை!

தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்..,) சார்பில்
நடத்தப்படும் மாணவர் திறனை மதிப்பீடு செய்யும் 'சிலாஸ்' (ஸ்டேட் லெவல் அச்சிவ்மென்ட் சர்வே) தேர்வுகள் கண்துடைப்பாகி விட்டது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், தொடக்க கல்வி மாணவர்கள் முந்தைய கல்வியாண்டில் பெற்ற, கற்றல் அடைவு திறன் (கற்றல் திறன்) தொடர்பான மதிப்பீட்டை, எஸ்.எஸ்.., மேற்கொள்கிறது. இதன்படி மூன்று, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடங்களில் 'சிலாஸ்' தேர்வு நடத்தி அவர்கள் அடைவு திறன் குறித்து மாநில அளவில் சர்வே எடுக்கப்படுகிறது.இந்தாண்டு இத்தேர்வு, டிச.,19ல் துவங்கி 22ல் (இன்று) முடிகிறது.
இத்தேர்வு எழுத, ஒவ்வொரு ஆண்டும், ஒரே பள்ளிகளை தேர்வு செய்வதாகவும், ஒரு வகுப்பில் 25க்கு குறைவாக மாணவர் எண்ணிக்கை உள்ள பள்ளிகள் தேர்வு செய்யப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், பெரும்பாலான பள்ளிகளில், 'வினாவிற்கான விடையை ஆசிரியர் சொல்லிக் கொடுப்பதால், மாணவர் அடைவு திறனை சோதிக்க வேண்டும் என்ற இத்தேர்வு நோக்கமே கேள்விக் குறியாகி விட்டது' எனவும் சர்ச்சை எழுந்துள்ளது. இதுதவிர, கல்வி செய்திகளை பதிவிடும் ஒருசில தனியார் 'வெப்சைட்'கள், இத்தேர்வு நடப்பதற்கு முன்பே வினாவிற்கான விடைகளை பதிவிடுகின்றன எனவும் ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: ஒரு யூனியனில் 1-5 வகுப்பில் 10 பள்ளிகள், 6-8 வகுப்பில் ஆறு பள்ளிகள் தேர்வு செய்து, இத்தேர்வு நடத்தி மாணவர் திறன் குறித்த சர்வே எடுக்கப்படும். மதிப்பெண் குறைந்தால் ஆசிரியர் கற்பித்தலில் கேள்வி எழும் என்பதால், மாணவர் விடையளிக்க ஆசிரியர் உதவி செய்கின்றனர் என பிரச்னை எழுந்தது.

இதனால் 'ஒரு பள்ளியில் நடக்கும் தேர்வை மற்றொரு பள்ளியை சேர்ந்த ஆசிரியர், தலைமையாசிரியர் கண்காணிக்க வேண்டும்,' என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஆனாலும் எந்த பள்ளிக்கு, எந்த ஆசிரியர் செல்கின்றனர் என்ற விவரம், முன்கூட்டியே தெரிந்து விடுகிறது. இதனால், அதிகாரிகள் கண்காணிப்பையும் மீறி 'மாணவர்களை நன்றாக தேர்வு எழுத வைத்து விடுகின்றனர்'. ஒவ்வொரு ஆண்டும் ஒரே பள்ளிகளை தேர்வு செய்யாமல் 25 பேருக்கு குறைவாக இருந்தாலும் அந்த பள்ளியையும் தேர்வு செய்ய வேண்டும். இதுபோன்ற குறைபாட்டை நீக்கினால் தான் 'சிலாஸ்' மூலம் உண்மையான சர்வேயை எதிர்பார்க்க முடியும், என்றார்.