பல்கலை, கல்லூரிகளில் 'டிஜிட்டல்' வழி கட்டணம்

பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், 'டிஜிட்டல்' பணப் பரிவர்த்தனையை துவக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை, அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில், பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. ரொக்கம் இல்லாத பரிவர்த்தனையை, அனைத்து இடங்களிலும் கொண்டு வர வேண்டும் என, மத்திய அரசு அறிவுறுத்திஉள்ளது. இந்நிலையில், அனைத்து கல்லுாரி மற்றும் பல்கலைகளில், டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் கட்டணங்களை வசூலிக்க, மத்திய பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டு உள்ளது. 


எந்த வகை கட்டணமாக இருந்தாலும், டிஜிட்டல் முறையிலேயே வசூலிக்க வேண்டும் என்றும், இதை பல்கலையின் துணை வேந்தர்கள் ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க வேண்டும் என்றும், யு.ஜி.சி., செயலர் ஜஸ்பால் சந்து உத்தரவிட்டுள்ளார்.அதேபோல், மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசின்கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மட்டுமே, இதை அமல்படுத்தியுள்ளன. மற்ற தனியார் பள்ளிகளில், 10 சதவீதம் மட்டுமே, டிஜிட்டல் முறைக்கு மாறியுள்ளன.