’டெட்’ சிலபசில் மாற்றம் வருமா? ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு!

ஆசிரியர் தகுதித்தேர்வு சிலபஸ் படி, பாட வாரியாக அளிக்கும், மதிப்பெண் முறைகளில், மாற்றம் கொண்டுவர வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.
மத்திய அரசு உத்தரவுப்படி, கடந்த 2010 ஆகஸ்ட் 23ம் தேதி, ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்), கட்டாயமாக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு, தமிழக அரசு, 2011 நவ., 11ம் தேதியில் தான், அரசாணை வெளியிட்டது.

ஆனால், டெட் தேர்வுக்கான விதிமுறைகள், மத்திய அரசு அறிவித்த தேதியில் இருந்து பின்பற்றப்படும் என, அறிவிக்கப்பட்டது. மத்திய அரசு அறிவிப்புபடி, ஒரு ஆண்டில், குறைந்தபட்சம் ஒரு தகுதித்தேர்வாவது நடத்த வேண்டும். 

அரசாணை வெளியான பின், ஆசிரியப்பணியில் சேர்ந்தவர்கள், ஐந்து ஆண்டுகளுக்குள், தேர்ச்சி பெற்றால் மட்டுமே, பணியில் தொடர முடியும். இதனால், 2011 ஆக., 23ம் தேதிக்கு முன்பு, சீனியாரிட்டி அடிப்படையில், காலிப்பணியிடம் நிரப்ப, சான்றிதழ் சரிபார்ப்பு நடைமுறைகள் முடித்தவர்களுக்கு, டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

இதற்கு பின் பணியில் சேர்ந்த, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், டெட் தேர்வு எழுத வேண்டியது அவசியம். ஆனால் தமிழகத்தில், கடந்த மூன்றரை ஆண்டுகளாக, தேர்வு நடக்கவில்லை. இதனால், நிபந்தனை காலம் முடிந்தும், டெட் தேர்வு எழுத முடியாமல், ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

இதுகுறித்து, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:

டெட் தேர்வு வினாத்தாள் படி, சமூக அறிவியல் பாடத்திற்கு மட்டும் 60 மதிப்பெண்களும், மற்ற பாடவாரியான பகுதிகளுக்கு, 30 மதிப்பெண்கள் மற்றும் உளவியல் பாடத்திற்கு, 30 மதிப்பெண்கள் அளிக்கப்படுகின்றன.

இதற்கு பதிலாக, ஆசிரியர்கள் தேர்வு செய்யும், முதன்மை பாடத்திற்கு, 60 மதிப்பெண்களும், மற்ற பாடங்களுக்கு 30 மதிப்பெண்களுக்கும், கேள்விகள் இடம்பெறும்படி, வினாத்தாள் திட்ட முறையை, மாற்றியமைக்க வேண்டும். மேலும், டெட் என்பது, தகுதியை நிரூபிக்கும் தேர்வு தான். கடந்த ஐந்து ஆண்டுகளாக, நுாறு சதவீத தேர்ச்சி அளித்துள்ளோம். 

டெட் எழுதாத காரணத்தால், வளர் ஊதியம், ஊக்க ஊதியம், மருத்துவ விடுப்பு உள்ளிட்ட, எந்த சலுகையும் கிடையாது. தேர்வு தாமதத்தால், பணிச்சலுகைகள் முற்றிலும் புறக்கணிக்கப்படும் நிலை தொடர்வது தவறான முன்னுதாரணமாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.