பி.இ படித்தவர்களுக்கு பி.எட் படிக்க அரசு அனுமதித்திருப்பது மேலும் வேலையில்லா பட்டதாரிகளை அதிகரிக்கும் - வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்

பி.இ படித்தவர்களுக்கு பி.எட் படிக்க அரசு அனுமதித்திருப்பது மேலும் வேலையில்லா பட்டதாரிகளை அதிகரிக்கும் என வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

     பெரம்பலூர் துறைமங்கலத்தில் தமிழ்நாடு பி.எட், கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி  ஆசிரியர்கள் சங்கத்தின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பெரம்பலூரில் நடைபெற்றது.
       1992-ம் ஆண்டு  முதல் தற்போது வரை சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கணினி அறிவியல் பி.எட். முடித்துள்ளதாகவும், அதற்கு அரசு முறையாக அங்கீகாரம் வழங்கவில்லை என்றும், தமிழக அரசு நடத்தும் எந்தொரு ஆசிரியர் நியமனத் தேர்விலும், கணினி அறிவியல் பி.எட். படித்தவர்களுக்கு தேர்வுகள் எழுதும் வாய்ப்புகள் இல்லை என்றும் தெரிவித்தனர். 
மேலும் இதே போன்று டி.இ.டி, டி.ஆர்.பி போன்ற தேர்வுகளிலும் புறக்கணிக்கப்படுவதை அரசு நிறுத்த வேண்டும்.
உதவி தொடக்க கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பி.எட் படிப்பு தகுதி என்று நிர்ணயிக்கப்பட்டு உள்ள நிலையில் கணினி ஆசிரியர்களை இதிலும் புறக்கணிப்பு செய்கின்றனர். 
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிற பாடப்பிரிவுகளுக்கு இணையாக கணினி அறிவியலும் இடம் பெற்றுள்ளது. ஆனால் அதற்கான ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படாமல் காலியாக உள்ளது. 
சுமார் 40 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வேலையில்லாமல் உள்ள நிலையில் பி.இ படித்தவர்களுக்கு பி.எட் படிக்க அரசு அனுமதித்திருப்பது மேலும் வேலையில்லா பட்டதாரிகளை அதிகரிக்கும் வாய்ப்பாகவே  அமையும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.  
கடந்த நவ.11-ம் தேதி மாவட்ட கல்வி அலுவலர்களிடம் காலிப்பணியிடம் குறித்து அறிக்கை கோரப்பட்டுள்ளது. எனவே வறுமையில் வாடும் தங்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென வேலையில்லா பட்டதாரிகள் ஆசிரியர் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.