இலவச பாட புத்தகங்கள் கொள்ளை : திருவள்ளூரில் 9 பேர் கைது

ஊத்துக்கோட்டை: அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க வைத்திருந்த, விலையில்லா பாட புத்தகங்களை திருடிய, ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர். வெள்ளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். இவர்களுக்கு வழங்குவதற்காக, பள்ளியில் உள்ள அறைகளில், அரசின் விலையில்லா பாட புத்தகங்கள் வைக்கப்பட்டு, சீலிடப்பட்டிருந்தன.
அதன் பொறுப்பாளராக இளநிலை உதவியாளர் சரவணன் மற்றும் ஆல்பர்ட் இருந்தனர்.கடந்த, 29ம் தேதி, வழக்கம் போல் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பள்ளிக்கு சென்றபோது, சீலிடப்பட்ட பூட்டு உடைக்கப் பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதையடுத்து, அறைக்கு சென்று பார்த்ததில், 751 புத்தகங்கள் கொள்ளை போனது தெரிந்தது. மாவட்ட கல்வி அதிகாரி லில்லி புஷ்பராணி, வெங்கல் போலீசிடம் இதுகுறித்து, புகார் அளித்தார். 

வழக்கு பதிந்த போலீசார், தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்த மினி லாரியை பிடித்து சோதனை செய்தனர். அதில், பள்ளியில் திருடப்பட்ட புத்தகங்கள் இருந்தன. இதையடுத்து, மினி லாரியில் இருந்தவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். விசாரணையில், வெள்ளியூர் அரசு பள்ளி இளநிலை உதவியாளர், தண்ணீர்குளம் ஆல்பர்ட் தலைமையில் புத்தகங்கள் திருடியதை ஒப்பு கொண்டனர்.


இதையடுத்து, கிளாம்பாக்கம் ஜெயபால், தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, ஐ.ஓ.சி., பகுதிகளைச் சேர்ந்த முஸ்தபா, 45, ஆனந்தன், 45, ரகு, 30, உள்ளிட்ட, ஒன்பது பேரை கைது செய்தனர். மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கொள்ளைக்கு முக்கிய நபரான ஆல்பர்ட்டை தேடி வருகின்றனர்.