நாளை முதல் புதிய 500 ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மூலம் விநியோகிக்கப்படும்: ரிசர்வ் வங்கி

நாளை திங்கட்கிழமை முதல் புதிய 500 ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மூலம் விநியோகிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது: -


முதன்முறையாக நட்சத்திர குறியீடு பதிப்பிக்கப்பட்ட புதிய 500 ரூபாய் தாள்கள் சந்தையில் விநியோகிக்கப்படுகின்றன. இவை 100 நோட்டுகள் கொண்ட கட்டுக்குள் சீரியல் வரிசைப்படி இருக்காது.

இது போன்ற 10, 20,50, 100 ரூபாய் நோட்டுகள் ஏற்கனவே புழக்கத்தில் உள்ளன. இதனிடையே வாரத்திற்கு 24,000 ரூபாய் என்ற வரம்பைத் தளர்த்துவது குறித்தும் வங்கிகள் ஆலோசித்து வருகின்றன.

அச்சடித்த புதிய பணம் கைக்கு வராமல் தட்டுப்பாடு நீடிப்பதால் தற்போது குறிப்பிட்ட 24,000 ரூபாயைக் கூட வாடிக்கையாளர்களுக்கு மொத்தமாக வங்கிகளால் தர இயலவில்லை.

ஆனால் அடுத்த வாரத்திற்குள் புதிய 2,000 ரூபாய் நோட்டுகளும் 500 ரூபாய் நோட்டுகளும் வங்கிகளில் முதலீடு செய்யப்படுவது அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்த வரம்பை தளர்த்த வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.