சர்ச்சையில் 4 ஆயிரம் ஆசிரியர் 'டிரான்ஸ்பர்' : ரெட்டிக்கு தொடர்பா; கலக்கத்தில் அதிகாரிகள்! - DINAMALAR

தமிழக கல்வித்துறையில் பெரும் அளவில் 2014-15ல் நடந்த 4 ஆயிரம் ஆசிரியர்கள் இடமாற்றம் பின்னணியில் சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டிக்கு தொடர்பு இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் கல்வி அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் முன்னாள் தலைமை செயலர் ராமமோகன ராவ் ஆசியுடன்
பொதுப்பணித்துறையில் மணல் குவாரிகள் உட்பட பல்வேறு துறைகளிலும் மொத்த 'கான்ட்ராக்ட்' பெற்று கோலோச்சிய சேகர் ரெட்டி சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டார்.
இவரது வாக்குமூலம் அடிப்படையில், தலைமை செயலர் ராமமோகனராவ் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் இவர்கள் இருவர் கூட்டணியில் பல்வேறு துறைகளிலும் முறைகேடு நடந்துள்ளதாக அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகின்றன. இதன் தொடர்ச்சியாக, கல்வித்துறையில் 2014-15ம் ஆண்டில் நடந்த பெரும் எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் பணியிட மாற்றத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகவும், அப்போது ஒரு பணியிட இடமாற்றத்திற்கு அதிகபட்சம் 5 லட்சம் ரூபாய் வரை பேரம் நடந்தது குறித்தும் விசாரிக்க வேண்டும் என தற்போது சர்ச்சை
ஏற்பட்டுள்ளது.
அப்போது, ஆந்திராவை சேர்ந்த ஒருவர் கண் அசைவில் தான் அனைத்து இடமாற்றங்களும் நடந்தன. அவருக்கும், தற்போது கைதான சேகர் ரெட்டிக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து வருமான வரித்துறை விசாரிக்க வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன.
சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: தமிழகத்தில் டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்ற 25 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் நேர்மையாக நடந்தது. பின் இரண்டாம் கட்டமாக 5 ஆயிரம் பேருக்கும் பணிகள் வழங்கப்பட்டன.
இதில் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தர்மபுரி, திருவண்ணாமலை, நாகபட்டினம், வேலுார், கிருஷ்ணகிரி ஆகிய வடமாவட்டங்களில் பணிநியமனம் செய்யப்பட்டனர். பின், 'ஆசிரியர்கள் பொது மாறுதல் கவுன்சிலிங்' என்ற பெயரில் பெரும்பாலான ஆசிரியர்கள் தென் மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
தென் மாவட்டங்களில் போதிய ஆசிரியர்கள் இருந்தபோதும் 'கூடுதல் பணியிடங்கள்' (உபரி) என்ற பெயரில் 'தாராள' இடமாற்ற உத்தரவுகள் வழங்கப்பட்டன. இதில் ஒரே பள்ளி; ஒரே பாடத்திற்கு இரண்டுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு கூட இடமாற்றம் உத்தரவு வழங்கப்பட்ட சம்பவங்கள் நடந்தன. அந்த சமயத்தில் மட்டும் 4 ஆயிரம் இடமாற்றங்கள் நடந்தன.
இதன் பின்னணியில், 'ஆந்திராவை சேர்ந்த ரெட்டி ஒருவர் இருந்தார். அவரது உத்தரவில் தான் இடமாற்றங்கள் நடக்கின்றன' என ஆசிரியர் சங்கங்கள் அப்போதே விமர்சித்தன.
தற்போது சேகர் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார். எனவே அப்போது 'ரெட்டி' என அழைக்கப்பட்டவர் 'சேகர் ரெட்டியா', அப்போதைய இடமாற்றங்களில் 'ஆதாயம்' பெற்ற கல்வி அதிகாரிகள் யார் யார் என்பது குறித்தும் வருமான வரித்துறை விசாரித்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,
என்றனர்.
ஜெ., கைதிலும் தொடர்ந்த 'டிரான்ஸ்பர்'
ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நேரத்தில் 27.9.2014ல் சொத்து குவிப்பு வழக்கு விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதா கைதான சம்பவம் நடந்தது. அச்சமயத்தில், அதாவது செப்., மாதத்திலும் கல்வித்துறையில் நுாற்றுக்கணக்கான ஆசிரியர் பணியிட இடமாற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன எனவும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.