2017 புத்தாண்டுப் பலன்கள்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்!

ஆண்டின் முதல் தேதியில் எண் கணிதப்படி, 3 ஆக வருகிறது. 2017 ஆம் ஆண்டின் எண் 1 என்று வருகிறது. அதனால் 1 ஆம் எண்ணுக்குரிய சூரியபகவானும் 3 ஆம் எண்ணுக்குரிய குருபகவானும் இந்த புத்தாண்டில் முக்கியமானவர்களாக கருதப்பட வேண்டும்.

இவ்வாண்டு, குரு, சந்திர பகவான்களின் காரகத்துவங்கள் சிறப்பாக பரிமளிக்கும் என்று கூறலாம். குருபகவானின் அருளால் இந்த ஆண்டு நீதி, நிர்வாகம் ஏற்றமளிக்கும். புதிய மாற்றங்களும் மக்களுக்கு நிரந்தர நன்மை கிடைக்கும் விதத்தில் அமையும். மேலும் ஆன்மிகம் யோகம் போன்றவைகளும் புகழ் பெறும்.
ஆங்கிலப் புத்தாண்டு (1.1.2017) சனிக்கிழமை இரவு ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை கன்னி லக்னம், சுக்கிர ஹோரையில் பிறக்கிறது.
இதுவர 2017ம் ஆண்டுப் பலன் பார்த்தோம். இனி முதல் நான்கு ராசிகளுக்கான புத்தாண்டு பலன்கள் எவ்வாறு உள்ளது என பார்க்கலாம்.
மேஷம்
(அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
இந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். யூகசக்தி பரிமளிக்கும்.
மற்றவர்களின் எண்ணங்களை முகத்தைப் பார்த்தே புரிந்து கொள்வீர்கள். உற்றார் உறவினர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். பொருளாதாரம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். செய்தொழிலில் நல்ல முறையில் செயல்படுவீர்கள். இந்த காலகட்டத்தில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். எதிரிகளை அவர்களின் வழியிலேயே சென்று திருத்துவீர்கள். அறிவுப்பூர்வமான ஆலோசனைகளை எவர் வழங்கினாலும் அவற்றை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தைப் பெறுவீர்கள். சமூகத்தில் அனைவராலும் மதிக்கப்படுவீர்கள். குடும்பத்தில் இருந்த நிம்மதியற்ற சூழ்நிலை மாறி மகிழ்ச்சி குடிகொள்ளும். விலகிச் சென்ற நண்பர்கள் திரும்பி வருவார்கள். ரகசியங்களை எச்சரிக்கையுடன் இருந்து அடுத்தவர்களுக்குத் தெரியாமல் காப்பாற்றுவீர்கள். வெளியில் கொடுத்திருந்த பணத்தை வசூலிக்க கஷ்டப்பட வேண்டியிருக்கும். வழக்குகளிலும் சாதகமான தீர்ப்புகள் வரத் தாமதமாகும். செயல்களில் வேகத்தைக் குறைத்துக்கொண்டு விவேகத்தைக் கூட்டிக் கொள்வீர்கள். பங்கு சந்தைகளில் ஈடுபட வேண்டாம். உடல் ஆரோக்கியம் மேம்பட யோகா, ப்ராணாயாமம் போன்றவைகளைச் செய்வீர்கள்.
செப்டம்பர் மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் உங்கள் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும். முகத்தில் புதுப்பொலிவு உண்டாகும். செய்தொழிலில் இருந்த சறுக்கல்கள் விலகி படிப்படியாக உயர்வைக் காண்பீர்கள். வருமானத்திற்குத் தடையாக இருந்த விஷயங்கள் தானாகவே விலகிவிடும். அதிர்ஷ்ட வாய்ப்புகளும் தானாகவே தேடி வரும். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். மனதிற்கினிய பயணங்களைச் செய்வீர்கள். இதன்மூலம் புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். நேர்முக மறைமுக போட்டிகளும் தானாகவே ஓய்ந்து விடும். நடக்காது என்று நினைத்திருந்த செயல்கள் திடீரென்று நடந்தேறும். உற்றார் உறவினர்களின் வருகையால் நன்மைகள் உண்டாகும் வீட்டிலும் வெளியிலும் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். சிலருக்கு வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். நடையிலும் ஒரு புதிய மிடுக்கு உண்டாகும். தொட்டது துலங்கும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்கள் இந்த புத்தாண்டில் மேலதிகாரிகளின் அபரிமிதமான பாராட்டு மழையில் நனைவார்கள். ஆவலுடன் எதிர்பார்த்த பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். சக ஊழியர்களுடன் நெருக்கம் அதிகமாகும். அரசு ஊழியர்களுடன் சுற்றுலா சென்று வருவீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் வகையில் நல்ல அபிவிருத்தி ஏற்படும். வியாபாரத்தில் போட்டியிருந்தாலும் முடிவு உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். வருமானம் சிறப்பாக இருப்பதால் வண்டி வாகனங்கள் வாங்கி வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் பெருகும். லாபத்தைச் சேர்த்து வருங்காலம் வளமாக அமைவதற்கு அடித்தளம் போடுவீர்கள். கால்நடை கோழி முட்டை வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றம் கூடும்.
அரசியல்வாதிகள் மனச்சோர்வு நீங்கி எதையும் சாதிக்கும் அளவுக்குத் தன்னம்பிக்கையுடன் திகழ்வீர்கள். புதிய பதவியில் அமர்ந்து சமுதாயத்திற்கு தொண்டாற்றுவீர்கள். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். ரசிகர்களின் ஆதரவுடன் பல கலைநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். வருமானமும் படிப்படியாக உயரும். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை மேலோங்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். தாய்வீட்டுச் சீதனம், பூர்வீகச் சொத்து ஆகியவை கிடைக்க வாய்ப்புண்டு. மாணவமணிகளுக்கு இந்த ஆண்டு மிகவும் சாதகமாக அமைகிறது. தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளுவார்கள். நண்பர்களுடன் இணக்கமாகப் பழகுவீர்கள்.
பரிகாரம்: பெருமாள் வழிபாடு உகந்தது.
***
ரிஷபம்
(கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2ம் பாதம் முடிய)
இந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் எதிர்பார்த்த மாற்றங்களைக் காண்பீர்கள். உங்களை வாட்டி வதைத்து வந்த விரக்தி மனப்பான்மை விலகி விடும். மனதிலிருந்த கலக்கங்கள் மறைந்து தெளிவு குடிகொள்ளும். மனதில் இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு அதை நோக்கி முன்னேறுவீர்கள். ஒரே இடத்தில் உழன்று கொண்டிருந்தவர்கள் சுறுசுறுப்பாக பல இடங்களுக்கும் பயணப்பட்டு தொழிலை மேம்படுத்துவார்கள். எதிர்பாராத வாய்ப்புகளையும் பெறுவீர்கள். போட்டியாளர்கள் விலகிவிடுவர். பணவரவில் தடைகளோ பொருளாதாரத்தில் கஷ்டங்களோ ஏற்படாது. நண்பர்கள் தேடிவந்து உதவி செய்வார்கள். கொடுத்த வாக்குறுதிகளை சுலபமாக நிறைவேற்றுவீர்கள். இல்லத்திற்கு தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். குழந்தைகளால் பெருமை உண்டு. அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்க வைப்பீர்கள். அரசு வகையில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். பொதுநலக் காரியங்களில் ஈடுபாடு கொள்வீர்கள். வழக்குகளில் வெற்றியுண்டு. அதிகார பதவிகளில் இருப்பவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். குழந்தைபாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.
செப்டம்பர் மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் செயல்களை முடிக்க கடினமாக உழைக்க வேண்டி வரும். பூர்வீகச் சொத்து விஷயங்களில் பாகப் பிரிவினை தாமதமாகும். உடன்பிறந்தோரும் சற்று பாராமுகமாகவே இருப்பார்கள். புதிய மாற்றங்கள் மனதிற்கு வருத்தமளிக்கும். உடலில் சிறு சோம்பல் குடிகொள்ளும். மந்தமாக காணப்படுவீர்கள். எவருக்கும் வாக்குக் கொடுக்கும்முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக் கொடுக்கவும். அனைத்து மாற்றங்களிலும் ஓர் அதிர்ஷ்டகரமான புதிய வாய்ப்பு புதைந்திருக்கும். ஆன்மிக தர்மகாரியங்களில் ஈடுபடுவீர்கள். சிலர் புதிய இடங்களுக்கும் மாற்றலாகிச் சென்று செய்தொழிலை விரிவுபடுத்துவார்கள். காரணம் புரியாமல் மனதில் ஒரு கலக்கம் தொடர்ந்து கொண்டிருக்கும் காலகட்டமாக இது அமைகிறது.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகளில் பளு குறைந்து காணப்படும். சிலருக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். சில சிறப்புச் சலுகைகளும் கிடைக்கும். உத்தியோக விஷயமாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதால் மகிழ்ச்சியும் லாபமும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சுமுகமாக முடியும். கமிஷன் ஏஜன்ஸி துறைகள் மூலம் லாபம் அதிகரிக்கும். வாராக் கடன் என்று நினைத்திருந்தவைகளும் வசூலாகும் ஆண்டாகும். விவசாயிகளுக்கு மகசூல் பெருகும். கொள்முதல் லாபம் அதிகரிக்கும். கால்நடைகளாலும் லாபங்கள் உண்டாகும். வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாகும்.
அரசியல்வாதிகளுக்கு இந்த ஆண்டு திருப்திகரமான ஆண்டாகும். உங்களின் சுயஜாதகம் பலம் பெற்று இருக்கும்பட்சத்தில் எட்டாக் கனியாக இருக்கும் அமைச்சர் போன்ற பதவிகள் பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் கிடைக்கும். எதிரிகள் உங்களிடமிருந்து விலகியே இருப்பார்கள். கலைத்துறையினரின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். எதிர்பார்த்த புகழ், பணவரவுண்டு. ரசிகர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். புதிய ஒப்பந்தங்களும் தேடிவரும். பெண்மணிகளுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்திலும் மருத்துவச் செலவு குறையும். அவ்வப்போது தலைகாட்டிய பிரச்னை ஒன்று முழுமையாகத் தீர்ந்துவிடும். கணவரின் ஆதரவும் முழுமையாகக் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். மாணவமணிகளுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். முதலிடம் பெறுவதற்கான வாய்ப்புகளும் உண்டாகும். விளையாட்டுகளில் சாதனை புரிவீர்கள்.
பரிகாரம்: குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.
***
மிதுனம்
(மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3ம் பாதம் முடிய)
இந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உடல்நலம் சீராகத் தொடங்கும். நண்பர்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் உதவி செய்வீர்கள். அவர்களின் உதவிகளையும் பெறுவீர்கள். விருந்து கேளிக்கைகளிலும் கலந்து கொள்வீர்கள். செய்தொழிலை திறம்பட நடத்துவீர்கள். எடுத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். மதிப்பு மரியாதை உயரும். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களை அனுசரித்துச் செல்லவும். சிலர் அசையாச் சொத்துக்களை வாங்குவார்கள். சிலருக்கு வசதியான வீட்டுக்கு மாறும் யோகமும் உண்டாகும். புதியவர்களிடம் எச்சரிக்கையாகப் பழகவும். குழந்தைகளையும் அவர்களின் வழியிலேயே சென்று திருத்துவீர்கள். பூர்வீகச் சொத்துக்கள் கடனில் சிக்கிக்கொள்ள நேரிடலாம். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தள்ளிப்போடவும். மனதில் இருந்த சோர்வுகள் அகலும். அறிவுப்பூர்வமான விஷயங்களில் விழிப்புணர்ச்சி உண்டாகும். உடன்பிறந்தோரிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அறிவாற்றலும் புத்திசாலித்தனமும் கூடும். பணவரவுக்கு தடை வராது. புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். நெடுநாளாகத் தள்ளிப்போட்டிருந்த குலதெய்வ வழிபாட்டினை இந்த காலகட்டத்தில் செய்வீர்கள்.
செப்டம்பர் மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் நண்பர்களுக்கு கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீர்கள். வருமானம் படிப்படியாக உயரும். இல்லத்திற்குத் தேவையான ஆடம்பரப் பொருள்களை வாங்குவீர்கள். தேக ஆரோக்கியம் மேம்பட தேவையான உடற்பயிற்சிகளைச் செய்வீர்கள். செய்தொழிலில் சட்ட திட்டங்களை உருவாக்கி அதன்படி நடப்பீர்கள். புதிய வீடு வாங்கும் யோகத்தையும் பெறுவீர்கள். வெளிநாட்டுத் தொடர்புகளையும் வலுப்படுத்திக் கொள்வீர்கள். எதிரிகளை ஒடுக்கும் வல்லமை உண்டாகும். சிறுதுரும்பும் பல்குத்த உதவும் என்கிற ரீதியில் பழமொழியை மனதில் வைத்துக் கொண்டு சக பணியாளர்களிடம் நடந்து கொள்ளும் காலகட்டமாக இது அமைகிறது.
 
உத்தியோகஸ்தர்கள் அதிகமாக உழைத்துப் பொருளீட்ட வேண்டிய ஆண்டாகும். அவ்வப்போது மேலதிகாரிகளின் தொந்தரவுகளுக்கு ஆளாவீர்கள். கொடுக்கப்பட்ட வேலைகளை கவனமாகச் செய்து வந்தால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். சிலருக்கு வருடாந்திர ஊதிய உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சக ஊழியர்களின் ஆதரவு இருப்பதால் உங்களின் மனச்சுமையை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். வியாபாரிகள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் அதற்குத் தகுந்த பலனைப் பெற முடியாது. கொடுக்கல் வாங்கல்கள் சுமாராகவே இருந்து வரும். கூட்டாளிகளின் சூழ்ச்சிக்கு ஆளாக வாய்ப்பு இருப்பதால் அவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். விவசாயிகள் செலவுகளைக் குறைத்து வரவுகளைப் பெருக்கிக் கொள்ளவும். கால்நடைகளின் மூலம் சிறிது நன்மைகள் ஏற்படும். புதிய முதலீடுகள் எதையும் செய்ய வேண்டாம்.
அரசியல்வாதிகள் மன சஞ்சலத்துடன் செயலாற்றுவீர்கள். கட்சி மேலிடத்தின் அவநம்பிக்கைக்கு ஆளாகி சிறிய தண்டனைகளையும் பெறுவீர்கள். தொண்டர்களின் ஆதரவு சற்று குறைய வாய்ப்பு உண்டாகலாம். கலைத்துறையினர் நிதானமான வளர்ச்சி அடைவார்கள். வருமானமும் படிப்படியாகத்தான் கூடும். நன்கு பரிசீலித்த பிறகே புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும். ஏனென்றால் ஏதேனும் சிக்கல்கள் உருவாகலாம். எச்சரிக்கைத் தேவை. பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சீராக இராது. வீண் பிரச்னைகளில் மாட்டிக்கொண்டு அவதிப்பட வேண்டாம். வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். மாணவமணிகள் அதிக சிரத்தை  எடுத்து படித்தால்தான் வெற்றியடைய முடியும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். தேவையான உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள்.
பரிகாரம்: துர்க்கை வழிபாடு உகந்தது.
****
கடகம்
(புனர்பூசம் 4ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
இந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் பிரச்னைகள் குறையும். நிதானமாகவும் பொறுமையுடனும் பணியாற்றுவீர்கள். வேலைகளை நண்பர்கள் உதவியுடன் வெற்றியுடன் முடித்துவிடுவீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். புதிய முதலீடுகள் செய்வீர்கள். எதிரிகளை ஒடுக்கும் வல்லமையை பெறுவீர்கள். குடும்பத்தில் பகைமை மறைந்து இணக்கம் சூழும். மனதில் இருந்த குழப்பங்களை ஒதுக்கி வைத்துவிட்டு செயல்களில் அக்கறை காட்டுவீர்கள். சிறிய மீனைப்போட்டு பெரிய மீனைப் பிடிப்பீர்கள். பிரச்னைகளிலிருந்து பின்வாங்காமல் கடினமாகப் போராடி வெற்றி பெறுவீர்கள். சமுதாயத்தில் புதிய பொறுப்புகள் தேடிவரும். குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். அவர்களுக்குத் தக்க ஆலோசனைகளையும் வழங்குவீர்கள். வெளிநாடு சம்பந்தமான விஷயங்கள் ஆக்கம் தரும். குடும்பத்தில் சுப காரியங்களைச் சிறப்பாக நடத்துவீர்கள். ஆன்மிக விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

செப்டம்பர் மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் சிறிய அளவு முயற்சிகளிலும் பெரிய அளவுக்கு வெற்றி காண்பீர்கள். செய்தொழிலில் போட்டி பொறாமைகள் இருந்தாலும் அவைகள் உங்களை பாதிக்காது. சிலருக்கு வசிக்கும் இடத்தைவிட்டு வேறு இடத்திற்கு மாறும் யோகமும் உண்டாகும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். நண்பர்களின் பேச்சில் உள்ள உள்ளர்த்தங்களுக்கு ஏற்ப நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வீர்கள். நன்றாக சிந்தித்து தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். நெடுநாளைய கனவு ஒன்று பலிக்கும். குழந்தை இல்லாதோருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். கடன் தொல்லை இராது. அனைத்து காரியங்களையும் உடனுக்குடன் முடித்துவிடுவீர்கள். முட்டுக்கட்டைகளைத் தகர்த்து விடுவீர்கள். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். புதிய நிலங்கள் வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்துக்களிலிருந்த பிரச்னைகள் தீர்ந்து சுமுகமான பாகப்பிரிவினை நடக்கும். இந்த காலகட்டத்தில் எவருக்கும் உங்கள் பெயரில் பணம் வாங்கித் தருவதோ, முன்ஜாமீன் போடுவதோ கூடாது.
உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு விரும்பிய இடமாற்றம் போன்றவை கிடைக்க வாய்ப்புண்டாகும். சக ஊழியர்கள் உங்களை அனுசரித்துச் செல்வதால் மேலதிகாரிகளிடம் நற்பெயர் எடுப்பீர்கள். அலுவலக வேலை விஷயமாக நீங்கள் செய்யும் பயணங்களால் நன்மை உண்டாகும். வியாபாரிகள் தற்போது செய்து வரும் வியாபாரத்தை சிறப்பாக நடத்தினாலே போதும் என்கிற நிலைமை இருக்கும். நண்பர்களை பெரிதாக நம்பி எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். கையிலிருக்கும் பணத்தை எடுத்து புதிய முதலீடுகள் எதுவும் செய்ய வேண்டாம். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்காது. கால் நடைகளும் எதிர்பார்த்த வருமானத்தைத் தராமல் போகலாம். உழைப்புக்கேற்ற பலன்களும் கிடைக்காமல் போகலாம்.
 
அரசியல்வாதிகள் எதையும் அவரசப்பட்டு பேசியோ, செய்தோ வீண் விவகாரங்களில் மாட்டிக்கொள்ள வேண்டாம். பெரிய பதவிகள் திடீரென்று தேடி வந்தாலும் அவற்றில் வெகு நாள்களுக்குத் தாக்கு பிடிக்க முடியாது. கலைத் துறையினருக்கு இருக்கும் ஒப்பந்தங்களை முடித்துக் கொடுப்பதே பெரிய விஷயமாகிவிடும் சக கலைஞர்களும் உதவியாக இருக்கமாட்டார்கள். கடினமான முயற்சிகளுக்குப் பிறகே எண்ணங்கள் நிறைவேறும். பெண்மணிகள் கணவரிடம் கொண்டுள்ள நெருக்கத்தில் விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் எதிலும் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். பணப்புழக்கம் குறைவாக இருக்கும். மாணவமணிகளுக்கு படிப்பில் தடை ஏற்பட வாய்ப்புண்டு. ஆகவே கவனம் தேவை. எச்சரிக்கையுடன் கூடுதல் முயற்சியுடன் படிக்கவும்.
பரிகாரம்: அனுமனை வழிபட்டு வரவும்.