சுவடுகள் 2016 - உலகம்

ஜனவரி
2     சவூதி அரேபியா அரசுக்கு எதிரான பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு நெருக்கடி கொடுத்து வந்த ஷியா பிரிவு மதகுரு நிமர் அல் நிமர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 46 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

6     வட கொரியா அரசு சிறியரக ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியதாக அறிவித்தது.
7     லிபியாவின் ஸிலிடன் நகரில் நிகழ்த்தப்பட்ட லாரி வெடிகுண்டு தாக்குதலில் 60 காவலர்கள் கொல்லப்பட்டதுடன், 200 பேர் பலத்த காயமடைந்தனர்.
7      சவூதி அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களை பயன்படுத்துவதற்கு ஈரான் அரசு தடை விதித்தது.
12    துருக்கி இஸ்தான்புல்லில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். பலியானவர்களில் பெரும்பாலானோர்  ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர்கள்.
16    தைவான் நாட்டின் முதல் பெண் அதிபராக ஜனநாயக முன்னேற்ற கழகத்தின்  தலைவர் சாய்-இங்வென் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
17    சர்வதேச அணுசக்தி கழகத்தின் விதிமுறைகளை   ஏற்றுக் கொண்டதையடுத்து ஈரான் மீதான பொருளாதார தடையை அமெரிக்கா விலக்கிக் கொண்டது.
18    பாகிஸ்தானின் பலூச் மாகாண தேசியவாத தலைவர் நவாப் அக்பர் கான் புகட்டி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முஷராப் தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.
20    துருக்கியிலிருந்து கிரீஸ் நாட்டுக்கு புகலிடம் தேடிச் சென்றவர்களின் படகு நடுக்கடலில் மூழ்கியதில் 20 குழந்தைகள் உள்பட 44 பேர் உயிரிழந்தனர்.
30    நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றத்துக்காக இலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபட்சவின் இரண்டாவது மகன் யோஷிதா ராஜபட்ச கைதானார்.  
31    சிரியா தலைநகர் டமாஸ்கஸில் தற்கொலைப்படை நிகழ்த்திய கார் வெடிகுண்டுத் தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டனர்; 110 பேர் காயமடைந்தனர்.
பிப்ரவரி
7     வட கொரியா, சர்வதேச நாடுகளின் எச்சரிக்கையை மீறி  நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ராக்கெட்டை ஏவியது.
11     இயற்பியல்-வானவியல் சரித்திரத்தின் முக்கிய நிகழ்வாக ஈர்ப்பு அலைகள் இருப்பதற்கான முதல் நேரடி தடயத்தை சர்வதேச விஞ்ஞானிகள் குழு கண்டறிந்தது.
15    சிரியாவில் பள்ளிகள், மருத்துவமனைகள் மீது ரஷியா வான்வழித்தாக்குதல் நிகழ்த்தியதற்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனத்தை பதிவு செய்தது.
21    சிரியா தலைநகரில் ஷியா பிரிவினருக்கு சொந்தமான மசூதி ஒன்றில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 150-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
24    நேபாளத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் இரண்டு சிறுவர்கள் உள்பட 23 பேர் உயிரிழந்தனர்.
மார்ச்
2    ஆப்கானிஸ்தானில் உள்ள ஜலலாபாத் நகரில் உள்ள இந்திய தூதகரத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் பாதுகாப்பு படை அதிகாரி உள்பட மூன்றுபேர் உயிரிழந்தனர்.
6    இராக் தலைநகர் பாக்தாதில் அமைந்துள்ள சோதனைச் சாவடி அருகே ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டனர்.
15    மியான்மரில் 1962-ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக ராணுவ பின்புலம் இல்லாதவரான ஹிடின் கியா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
20    90 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு கம்யூனிஸ நாடான கியூபாவுக்கு   அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
22 பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிகழ்த்திய தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 35 பேர் உயிரிழந்ததுடன், 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
மார்ச் 27: பாகிஸ்தானின் லாகூர் நகர பூங்காவில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டனர்; 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஏப்ரல்
3    சர்வதேச நாடுகளின் அரசியல் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் வெளிநாடுகளில் சொத்து சேர்த்ததற்கான முக்கிய ஆவணங்கள் "பனாமா பேப்பர்ஸ்' என்ற பெயரில் வெளியாகின.
5    அமெரிக்காவில் விசா மோசடியில் ஈடுபட்ட 10 இந்திய வம்சாவளியினர் உள்ளிட்ட 21 பேரை சட்ட அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.
8    இந்தியாவில் ஹெலிகாப்டர் விற்பனை செய்வதற்காக ஊழலில் ஈடுபட்ட ஃபின்மெக்கானிக்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜியுசெப்பி ஓர்ஸிக்கு இத்தாலி நீதிமன்றம் நான்கரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
16    ஈக்வடாரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்துக்கு 400 பேர் உயிரிழந்தனர். ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.8  என பதிவானது.
19    சிரியாவில் அல்-நுஸ்ரா பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இத்திலிப் மாகாணப் பகுதியில் அரசு படைகள் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டனர்.
21    பாலியல் அடிமைகளாக மாற மறுத்த 250 பெண்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் மரண தண்டனை நிறைவேற்றினர்.
27    கனடாவின் மான்ட்ரியல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உலகிலேயே மிகச் சிறிய தெர்மாமீட்டரை உருவாக்கினர். இது, மனிதனின் தலைமுடியை காட்டிலும் 20,000 மடங்கு சிறியதாகும்.
மே
7     லண்டனின் மேயராக தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த சாதிக் கான் பதவியேற்றார். இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஒருவர் லண்டன் மேயராவது இதுவே முதல்முறை.
9    வட கொரியா ஆளும் தொழிலாளர் கட்சியின் தலைவராக கிம்-ஜோங் உன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
17    தென் கொரியாவைச் சேர்ந்த நவாலாசிரியர் ஹேன் கங்க் எழுதிய "தி வெஜிடேரியன்' நாவல் புக்கர் விருதை தட்டிச் சென்றது.
22    அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் பாகிஸ்தானில் நிகழ்த்திய அதிரடித்  தாக்குதலில் தலிபான் தலைவர் முல்லா அக்தர் மன்சூர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் அறிவித்தது.
29    மத்திய தரைக்கடல் பகுதியில் 7 நாள்களில் 3 கப்பல்கள் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 700க்கும் மேற்பட்ட லிபிய அகதிகள் பலியானதாக ஐ.நா. அகதிகள் அமைப்பு தகவல் வெளியிட்டது.
ஜூன்
6    காமன்வெல்த் நாடுகளுக்கு இடையிலான சிறுகதை போட்டியில் முதல் முறையாக இந்தியாவைச் சேர்ந்த பேராசிரியர் பராசர் குல்கர்னி முதல் பரிசு வென்றார்.
7    மும்பையில் 2008-இல் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பிருப்பதை சீனா முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொண்டது.
9    மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீனை கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக, அந்நாட்டின் முன்னாள் துணை அதிபர் அகமது அதீபுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
12    அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் ஓரினச் சேர்க்கையாளர்களின் விருந்து நிகழ்ச்சியில், இஸ்லாமிய பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
30    இந்தியாவின் சூரியஒளி மின்உற்பத்தி திட்டங்களுக்காக, ரூ.6,700 கோடி நிதியுதவி வழங்கப்படும் என உலக வங்கி அறிவித்தது.
ஜூலை
3     இராக் தலைநகர் பாக்தாதில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலை படை தாக்குதலில் 125 பேர் உயிரிழந்தனர்.
6    பாராஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவரான தென்னாப்பிரிக்க தடகள வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸýக்கு, காதலியை கொன்ற வழக்கில் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
13    "பிரெக்ஸிட்' வாக்கெடுப்பு முடிவுகள் எதிரொலியாக பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகியதைத் தொடர்ந்து, புதிய பிரதமராக தெரஸா மே பதவியேற்றார். பிரிட்டனில் பிரதமர் பதவியேற்கும் 2-ஆவது பெண் இவராவார்.
15    பிரான்ஸின் நைஸ் நகரில் நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டத்தின்போது, மக்கள் கூட்டத்துக்குள் சரக்கு லாரியை அதிவேகமாக செலுத்தி ஐ.எஸ். பயங்கரவாதி நிகழ்த்திய தாக்குதலில் 84 பேர் உயிரிழந்தனர்.
ஆகஸ்ட்
3     நேபாள பிரதமராக மாவோயிஸ்ட் கட்சித் தலைவர் பிரசந்தா இரண்டாவது முறையாக தேர்வானார்.
8    பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் மருத்துவமனையில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தனர்.
12    ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தலைவரான ஹஃபீஸ் சயீத் கான், ஆப்கனில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது.
24    இத்தாலி நாட்டின் மத்திய பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 250 பேர் பலியாகினர்.
25    ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் "ரோபோ டாக்ஸி' சேவை, உலகிலேயே முதல் முறையாக சிங்கப்பூரில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
26    இந்தியாவுக்காக பிரான்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வரும் அதிநவீன "ஸ்கார்பீன்' ரக நீர்மூழ்கி கப்பல்கள் குறித்த ரகசியத் தகவல்கள், ஆஸ்திரேலிய ஊடகத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
செப்டம்பர்
3    போர்க் குற்றங்களுக்காக, வங்கதேச ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் முக்கிய தலைவர் மிர் காசிம் அலி தூக்கிலிடப்பட்டார்.
4    வாடிகன் நகரிலுள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற நிகழ்வில், அன்னை தெரஸாவை புனிதராக பிரகடனப்படுத்தினார் போப் பிரான்சிஸ்.
17    ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு, பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி, பின்னர் அவர்களிடமிருந்து தப்பிய ஈராக் இளம்பெண் நாடியா முராத் பாஸி தாஹா (23), ஆள்கடத்தலால் பாதிக்கப்பட்டோருக்கான ஐ.நா. தூராக நியமிக்கப்பட்டார்.
27    மரபியல் நோய்களில் இருந்து குழந்தைகளை காப்பதற்காக, தாய்-தந்தை மரபணுவுடன் மூன்றாவது ஒரு நபரின் மரபணுவையும் கருவில் இணைக்கும் புதிய மருத்துவ நுட்பத்தை பயன்படுத்தி முதல் ஆண் குழந்தை பிறந்தது.
அக்டோபர்
8    ஹைதி தீவில் "மேத்யூ' புயல் தாக்கியதில் 900 பேர் உயிரிழந்தனர்.
19    நண்பரை கொலை செய்த வழக்கில், சவூதி அரச குடும்பத்தைச் சேர்ந்த துர்க்கி பின் சவூத் அல்-கபீருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
20    வெளிநாடுகளில் சொத்துகள் வாங்கி குவித்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்யக் கோரும் மனுக்கள் தொடர்பாக அவருக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
31    வங்கதேசத்தின் பிரமன்பாரியா மாவட்டத்தில், இஸ்லாம் மதத்தை அவமதித்ததாக 100க்கும் மேற்பட்ட ஹிந்துக்களின் வீடுகள் சூறையாடப்பட்டதுடன், 15 ஹிந்து கோயில்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
நவம்பர்
4    புவி வெப்பமயமாதலை தடுப்பதற்காக பாரீஸ் பருவநிலை மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தில், இந்தியா உள்ளிட்ட 96 நாடுகள் முறைப்படி இணைந்ததையடுத்து, அந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.
9    அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டனை தோற்கடித்து, குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். இவர், அமெரிக்காவின் 45ஆவது அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.
25    கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ (90) மறைந்தார்.
28    கொலம்பியாவின் மெடில்லின் நகர் அருகே பயணிகள் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் பிரேசில் கால் பந்து அணியினர் உள்பட 81 பேர் உயிரிழந்தனர்.
29    பாகிஸ்தான் ராணுவ புதிய தலைமை தளபதியாக குவாமர் ஜாவத் பாஜ்வா பொறுப்பேற்றார்.
டிசம்பர்
1    தாய்லாந்து புதிய மன்னராக மஹா வஜிரலங்காரன் (64) பதவியேற்றார்.
7    பாகிஸ்தானின் அபோதாபாத் அருகே அந்நாட்டுக்கு சொந்தமான பயணிகள் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 48 பேர் பலியாகினர்.
12    பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் புதிய தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் நவீத் முக்தார் நியமிக்கப்பட்டார்.
19    அமெரிக்க அதிபரைத் தேர்வு செய்யும் அமைப்பான எலெக்டோரல் காலேஜ் எனப்படும் மாகாணங்கள் வாரியான "தேர்வு செய்வோர் அவை' மூலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில், டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாக 304 வாக்குகளும், அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக 227 வாக்குகளும் கிடைத்தன. இதன் மூலம், அமெரிக்காவின் புதிய அதிபராக குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிகார பூர்வமாக தேர்வு செய்யப்பட்டார்.