அமைச்சர்கள் விழா ஆசிரியர்களுக்கு தடை

அமைச்சர்கள் பங்கேற்கும் விழாவில், பகுதிநேர ஆசிரியர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர் சங்கத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பள்ளி மாணவர்களின் கலை, ஓவியம், இசை உள்ளிட்ட தனித்திறமைகளை ஊக்குவிக்க, இரண்டு ஆண்டுகளாக, தமிழக அரசு போட்டிகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான இறுதி போட்டியும், பரிசளிப்பு விழாவும், கோவையில் இன்றும், நாளையும் நடக்கிறது.
விழாவில், அமைச்சர்கள் பாண்டியராஜன், வேலுமணி, பள்ளிக்கல்வி செயலர் சபிதா, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். 



மாநில அளவிலான போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழாக்களில், பகுதிநேர ஆசிரியர்கள் பங்கேற்க, கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தடை விதித்துள்ளது. 

இதுகுறித்து, தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்க மாநில தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் கூறியதாவது:அரசு பள்ளிகளில் கலை, ஓவியம், இசை போன்ற தனித்திறன் பயிற்சி அளிக்கும் பணியில், 16 ஆயிரத்து, 500 பகுதிநேர ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். மிக குறைந்த சம்பளம் வழங்கினாலும், கலை மீதான ஆர்வத்தால் அவர்கள் இப்பணியை சேவையாக செய்கின்றனர்.


'பகுதிநேர ஆசிரியர்கள், கலைத்திறன் போட்டிகளில் பங்கேற்க கூடாது' என, கோவை மாவட்ட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். பரிசளிப்பு விழாவிலும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு உள்ளதால், கலை ஆசிரியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஆசிரியர் சங்கங்கள் போராட்டங்கள் நடத்தி, வகுப்புகளை புறக்கணித்த போது, பகுதிநேர ஆசிரியர்கள் தான் பள்ளிகளை இயக்க உதவினர். ஆசிரியர்களை, இது போன்று அவமதிக்க கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.