உள்ளாட்சி தேர்தல் நடத்த இம்மாத இறுதியில் அறிவிப்பு?

மாமல்லபுரம்: தமிழக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு, இம்மாத இறுதியில் ெவளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில், உள்ளாட்சி அமைப்புகளில், 2011 முதல், மக்கள் பிரதிநிதிகளாக பொறுப்பு வகித்தவர்களின் பதவிகாலம், கடந்த மாதம், 25 உடன் முடிந்தது. புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க, கடந்த மாதம், 17 மற்றும் 19ம் தேதிகளில் தேர்தல் நடத்த, தேர்தல் ஆணையம் ஏற்பாடு மேற்கொண்டது. 

இத்தேர்தலில், பதவிகளுக்கான இன சுழற்சிமுறை முறையாக பின்பற்றப்படவில்லை என, தி.மு.க., வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்றம், தேர்தலுக்கு தடை விதித்தது. அதைத் தொடர்ந்து, விசாரணை முடிவில், அடுத்த மாத இறுதிக்குள், தேர்தல் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.இதற்கிடையே, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளின் இடைதேர்தல் முடிந்துள்ள நிலையில், இம்மாத இறுதியில், உள்ளாட்சித் தேர்தல் குறித்து அறிவிக்கப்படலாம் என, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை, சில கட்சிகளின் நிர்வாகிகளும் தெரிவித்து உள்ளனர்.