முகவர்கள் நியமிக்க 'டெண்டர்' கோரியது அரசு -

 அங்கன்வாடி மைய குழந்தைக்கும் இனி 'ஆதார்' எண் பெறலாம்--அங்கன்வாடி மையங்களில் படிக்கும், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் இனி, 'ஆதார் ' பதிவுகளை மேற்கொள்ள வசதியாக,
அதற்கான முகவர்களை நியமிக்க, 'டெண்டர்' கோரப்பட்டு உள்ளது.

இது குறித்து, தகவல் தொழில் நுட்ப துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், ஆதார் அட்டை பதிவு பணிகளை, அக்., முதல், தமிழக அரசு ஏற்றுள்ளது. அதற்கு முன் வரை, பள்ளிகளில், ஆதார் பதிவை மேற்கொண்டு வந்த மத்திய அரசு நிறுவனமான, 'பெல்' அப்பணிகளை நிறுத்தியது. அதனால், மீதமுள்ள மாணவர்களுக்கு, ஆதார் பதிவை மேற்கொள்ளும் பணிகள், சமீபத்தில் துவங்கின. இந்நிலையில், அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கும், ஆதார் பதிவு செய்வது பற்றிய கருத்து, முன் வைக்கப்பட்டது. அதனால், பள்ளிகளில் விடுபட்ட மாணவர்களுக்கான ஆதார் பணி, அங்கன்வாடி மையங்களுடன் சேர்த்து நடத்தப்பட உள்ளது. இனி, அங்கன்வாடி மையங்களில் உள்ள, ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், புதிதாக சேரும் குழந்தைகள் என, 50 லட்சம் குழந்தைகளுக்கு, தொடர்ச்சியாக ஆதார் பதிவு மேற்கொள்ளப்படும். இதற்கு தகுதியுடைய, யு..டி..., அங்கீகாரம் பெற்ற மற்றும் ஆதார் நிறுவனத்தின் சான்று பெற்ற முகவர்களை தேர்வு செய்ய, அரசு டெண்டர் கோரியுள்ளது. இதற்கான ஆவணத்தை, www.tnega.in என்ற இணையதளத்தில், இலவசமாக பதிவிறக்கம் செய்து, டிச., 13க்குள் முகவர்களை சமர்ப்பிக்கலாம். அதன்பின், தமிழகத்தில், பிறந்த குழந்தை முதல் அனைத்து வயதினருக்கும், ஆதார் கிடைத்து விடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.