ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் இன்று விவரம் சேகரிக்கிறது அதிகாரிகள் குழு

வேலூர் மாவட்டத்தில், குடும்ப அட்டைகளில் இதுவரை 64 சதவீதம் பேர் ஆதார் அட்டை எண்ணை இணைத்துள்ளனர். எஞ்சிய அட்டைதாரர்களை இணைப்பதற்காக அதிகாரிகள் தலைமையில் அமைக்கப்பட்ட குழு வீடுவீடாக ஆய்வு செய்யும் பணியை புதன்கிழமை தொடங்குகிறது.


சுமார் 10.5 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் கொண்ட வேலூர் மாவட்டத்தில், அரக்கோணம் வட்டத்தில் 151 கடைகள், நெமிலியில் 115 கடைகள், வாலாஜாவில் 186, ஆற்காட்டில் 159, காட்பாடியில் 184, வேலூரில் 164, அணைக்கட்டில் 105, குடியாத்தத்தில் 114, பேர்ணாம்பட்டில் 96, ஆம்பூரில் 143, வாணியம்பாடியில் 123, நாட்டறம்பள்ளியில் 85, திருப்பத்தூரில் 190 கடைகள் என 1,815 நியாய விலைக் கடைகளில் செயலி முறை பயன்படுத்தப்படுகிறது. இந்தக் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்களுக்கு செயலியை இயக்க மாவட்டத்தில் 8 மையங்களில் செயல்முறை பயிற்சி அளிக்கப்
பட்டுள்ளது.

நியாய விலைக் கடைகளில் பயன்படுத்தப்படும் செயலியில் குடும்ப அட்டையில் உள்ள 5 வயதுக்கு மேற்பட்ட அனைத்து உறுப்பினர்களின் பெயர், ஆதார் எண், செல்லிடப்பேசி போன்ற தகவல்கள் பதிவு செய்யப்படுவதுடன், பொருள்கள் வாங்கிய விவரம், குடும்பத் தலைவரின் செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகிறது.
 இந்தத் திட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இதுவரையில் 64 சதவீத அட்டைதாரர்கள் தங்களது ஆதார் எண், செல்லிடப்பேசி விவரங்களை நியாய விலைக் கடைகளில் பதிவு செய்துள்ளனர்.
 ஆதார் அட்டை எடுக்கத் தவறியவர்களுக்கு அட்டை எடுக்கும் பணி அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் தீவிரமாக நடந்து வருகிறது.
இதற்கிடையில், நியாய விலைக் கடைகளில் ஆதார் அட்டை இணைப்பதற்காக அண்மையில் நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் சுமார் 50,000 பேர் இணைந்துள்ளனர்.
 மாவட்டம் முழுவதிலும் உள்ள 13 வட்டங்களில் துணை ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மண்டலக் குழுவானது, வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்து, ஆதார் அட்டையை நியாய விலைக் கடைகளில் இணைக்கும் முயற்சி எடுக்கவுள்ளது. 
இதுகுறித்து பொதுவிநியோகத் திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:  ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம், போலி கார்டுகளை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண், செல்லிடப்பேசி விவரம் இணைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
 நியாய விலைக் கடைகளில் ஆதார் அட்டை இணைக்காத உறுப்பினர்களை இணைப்பதற்காக வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்யும் பணி புதன்கிழமை முதல் தொடங்கி சில நாள்களில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 நியாய விலைக் கடையில் குடும்ப அட்டையில் பெயர் உள்ள உறுப்பினரின் ஆதார் அட்டை இணைக்க முடியாதவர்களின் பெயரை நீக்கம் செய்வதோ, பொருள்கள் வழங்குவதோ நிறுத்தப்பட மாட்டாது என்றார்.