உலகத் தரத்துக்கு உயர்த்த பள்ளிகள் தர மதிப்பீடுத் திட்டம்

உலக தரத்துக்கு இந்திய பள்ளிகளின் தரத்தை உயர்த்த பள்ளித் தரங்கள் மற்றும் மதிப்பீடு திட்டம் உருவாக்கப்பட்டு, அதுகுறித்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

 
        மேம்படுத்தப்பட்ட செயல் திட்டங்கள் மூலம் அறிவார்ந்த குழந்தைகளை உருவாக்குவது அனைத்துப் பள்ளிகளின் முக்கியக் கடமையாகும். செயல் திட்டங்கள் சிறப்பாக அமல்படுத்தப்பட வேண்டுமானால் பள்ளிகளில் கட்டமைப்பு வசதி, மனிதவளம், கற்றல், கற்பித்தல் முறை, சமூகத்துடன் இணைந்து செயல்படும் நடைமுறை போன்றவை நன்முறையில் பேணுதல் அவசியம்.

பள்ளிக்கு அரசு வழங்கும் சலுகைகள், திட்டங்களை நடைமுறைப்படுத்துவதுடன் அனைத்துப் பள்ளிகளும் தாமாகவே பள்ளிச் சூழலுக்கு ஏற்ப செயல்களை திட்டமிட்டு தகுந்த மனித வளத்துடன் நடைமுறைப்படுத்துவது மிகுந்த பலனைத் தரும். அந்த வகையில் ஒவ்வொரு பள்ளியும் தமது முன்னேற்றத்தை அவ்வப்போது சுய பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும்.
அதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்பேரில், தேசியக் கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாகப் பல்கலைக்கழகம், இந்தியாவில் உள்ள பள்ளிகளின் தரத்தை உலக தரத்துக்கு உயர்த்தும் நோக்கில் பள்ளித் தரங்கள் மற்றும் மதிப்பீட்டுத் திட்டத்தை உருவாக்கியுள்ளது.
தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாகப் பல்கலைக்கழகத்தால் பல்வேறு நிலைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைக்குப் பிறகு, இத்திட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. பள்ளிகளின் தரமானது பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உதவியுடன் சுய மதிப்பீடும், ஆய்வு அலுவலர்கள், வல்லுநர்கள் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன கல்வியாளர்கள் அடங்கிய குழு மூலம் புற மதிப்பீடும் செய்யப்படுகிறது.
இதற்காக பள்ளித் தரங்களம் மற்றும் மதிப்பீடு திட்ட இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் ஒவ்வொரு பள்ளிக்கும் உள்ளீடு முகவரி மற்றும் கடவுச் சொல் உருவாக்கி அதன்மூலம் சுய மதிப்பீடு அறிக்கைகளை பதிவேற்றம் செய்யலாம். மேலும் மதிப்பீடு சார்ந்த கருத்துருக்களை பதிவிறக்கம் செய்யலாம்.
அதேபோல புற மதிப்பீட்டாளர்
களும் ஒவ்வொரு பள்ளிக்கும் உள்ளீடு முகவரி மற்றும் கடவுச் சொல் உருவாக்கி அதன் மூலம் புற மதிப்பீட்டு விவரங்கள் செலுத்தி, புற மதிப்பீட்டு அறிக்கையினை உருவாக்கலாம்.
அவ்வாறு மதிப்பீடு அடிப்படையில் முதல், இரண்டு மற்றும் மூன்று என பள்ளிகள் தர அந்தஸ்து (கிரேடு) வழங்கப்
படுகிறது.
முதல் தரம் அந்தஸ்து என்றால் சுமார், 2-வது சாதாரணம், 3-வது தர அந்தஸ்து பெற்ற பள்ளி சிறந்த பள்ளி ஆகும்.
2016-2017 ஆண்டிலேயே இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், தற்போது 2016 நவம்பர் மாதத்தில் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு இத்திட்டம் குறித்த அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அரசுப் பள்ளிகள் அனைத்தும் உலகத் தரத்துக்கு இணையாக கல்வி வழங்கும் பள்ளிகளாக தரம் உயர்வதையும், நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே சீரான தரத்துடன் கல்வி வழங்குவதையும் இத்திட்டம் உறுதிப்படுத்தும்.
தரங்கள் மதிப்பீடு செய்ய ஏழு முக்கியக் காரணிகள்
1. பள்ளி வளாகம், விளையாட்டு மைதானம், கணினி, வகுப்பறைகள், மின் சாதனங்கள், நூலகம், குடிநீர் வசதி, கழிப்பறை உள்ளிட்ட வளங்களை கையாளுதல்.
2. ஆசிரியர்கள் கற்போரை புரிந்து கொள்ளுதல், ஆசிரியர்களின் பாடம் மற்றும் கற்பித்தல் அறிவு, கற்பித்தலுக்கான திட்டமிடல் உள்ளிட்ட கற்றல், கற்பித்தல் மற்றும் மதிப்பிடுதல் ஆகும்.
3. கற்போரின் வருகை, கற்போரின் பங்கேற்பு மற்றும் ஈடுபாடு, கற்போரின் வளர்ச்சி ஆகியவை உள்ளடங்கிய கற்போரின் முன்னேற்றம், அடைவு மற்றும் வளர்ச்சியாகும்.
4. புதிய ஆசிரியர்களுக்கான ஆயத்தப் பயிற்சி, ஆசிரியர்களின் வருகை, செயல் இலக்குகளை வரையறுத்து பொறுப்புகளை ஒப்படைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆசிரியர்களின் செயல்பாடு மற்றும் பணி சார்ந்த வளர்ச்சியினை நிர்வகித்தல் ஆகும்.
5. தொலைநோக்குச் சிந்தனைகளை உருவாக்குதல், மாற்றம் மற்றும் முன்னேற்றத்துக்கான செயல்பாடுகளை உள்ளடக்கிய பள்ளித் தலைமை மற்றும் மேலாண்மையாகும்.
6. உள்ளடங்கிய கற்றல் சூழல், சிறப்புத் தேவையுள்ள குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி, உடல் பாதுகாப்பு, உளவியல் ரீதியான பாதுகாப்பு, சுகாதாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய உள்ளடங்குதல், ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு.
7. பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழு ஒருங்கிணைப்பு, பள்ளி முன்னேற்றத்தில் பங்கு, பள்ளிக்கும் சமுதாயத்துக்கும் இடையே உள்ளத் தொடர்பு, சமுதாயம கற்றல் வளம், சமுதாய மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய ஆக்கப்பூர்வமான சமுதாய பங்கேற்பு.