நவம்பர் மாத சம்பள கோரிக்கை, அரசு ஊழியர்கள் அதிருப்தி

நவம்பர் மாத சம்பளத்தை, ரொக்கமாக வழங்க வேண்டும் என, அரசு ஊழியர் சங்கங்கள் விடுத்த கோரிக்கைக்கு, அரசு தரப்பில், எந்த பதிலும் அளிக்கப்படவில்லை; இது, அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்., மையங்களில், பணம் எடுக்க, மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது. எனவே, நவ., மாத சம்பளத்தை, ரொக்கமாக வழங்க வேண்டும் என, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று, அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க நிர்வாகிகள், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலரை சந்தித்து, மனு கொடுத்தனர்; ஆனால், எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை. வழக்கம் போல், வங்கிக் கணக்குகளில் தான், சம்பள பணம் போடப்படும் என்பதால், அரசு ஊழியர்கள் அதிருப்தியடைந்து உள்ளனர்.