9ம் வகுப்பு வரை புதிய வகை வினாத்தாள் : போட்டி தேர்வுக்கு தயார்படுத்தும் முயற்சி

போட்டி தேர்வுகளை, மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில், அவர்களை சிந்திக்க வைக்கும் வகையிலான வினாத்தாள்களை, பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க, பல விதமான தேர்வுகளை மத்திய, மாநில அரசுகள் நடத்துகின்றன. அத்துடன், பள்ளிப்படிப்பு முடிந்தவுடன், உயர்கல்வியில் சேர, 'ஜே.இ.இ., - நீட் - கேட்' என, பல நுழைவுத் தேர்வுகளும் உள்ளன. 


இந்த நுழைவு தேர்வுகளில், தமிழக மாணவர்கள் பின்தங்கியிருப்பதாக, கல்வியாளர்கள் பலர் புகார் தெரிவித்தனர். அதனால், நுழைவுத் தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில், அவர்களை தொடக்கப் பள்ளியில் இருந்தே தயார் செய்ய, புதிய வினாத்தாள் முறையை, தமிழக பள்ளி கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. இதுபற்றிய அறிவிப்பை, குழந்தைகள் தின விழாவிலேயே, பள்ளிக்கல்வி செயலர் சபிதா வெளியிட்டார். இதைத்தொடர்ந்து, அனைத்து அரசு பள்ளிகளிலும், புதிய வினாத்தாளை பயன்படுத்தி, சிறப்பு தேர்வுகள் துவங்கியுள்ளன.

இது குறித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், ராமேஸ்வர முருகன் கூறியதாவது: மாணவர்கள் ஒவ்வொரு வினாவையும் புரிந்து, சிந்தித்து, விடையை தேர்வு செய்யும் வகையில், புதிய வினாத்தாளில், 'அப்ஜெக்டிவ்' வகை வினாக்கள் இடம் பெற்றுஉள்ளன. இந்த நடைமுறை, மூன்று பருவ தேர்வுகள் மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை தேர்வுகளுக்கும் பின்பற்றப்படும். இந்த வினாத்தாளுக்கு, மாணவர்கள் தொடக்கப்பள்ளி முதலே பழகிவிட்டால், உயர்கல்விக்கு வரும் போது, போட்டி தேர்வுகளை எதிர்கொள்வது எளிதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.