கார், வேளாண், வீட்டுக் கடன்களுக்கான தவணை செலுத்த 60 நாள் கூடுதல் அவகாசம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

  புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் பணப்பற்றாக்குறை நிலவி வருவதால், வீட்டுக் கடன், வேளாண் கடன், கார் கடன் உள்ளிட்டவற்றுக்கான தவணையைச் செலுத்துவதற்கு 60 நாள்கள் கூடுதல் அவகாசம் வழங்கப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.


அனைத்து வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு இந்த அவகாசத்தை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நவம்பர் 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை கடனுக்கான தவணை செலுத்த வேண்டியவர்களுக்கு இந்த அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

தனிநபர் கடன், வீட்டுக் கடன், பயிர்க் கடன், கார் மற்றும் வாகனக் கடன் ஆகியவற்றுக்கு இந்தச் சலுகை பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தனி நபர்களைத் தவிர, நடைமுறை மூலதனக் கணக்கில் கீழ் ரூ.1 கோடி வரை கடன் பெற்றிருக்கும் நிறுவனங்களுக்கும் கூடுதலாக 60 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.