பயிற்சிகளால் பதறும் ஆசிரியர்கள் பாடங்களை முடிக்க முடியாமல் திணறல்

ஆசிரியர்களுக்கு அடுத்தடுத்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதால், இரண்டாம் பருவப் பாடங்களை நடத்தி முடிக்க முடியாமல் பட்டதாரி ஆசிரியர்கள் திணறுகின்றனர்.அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,), அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,), ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் அரசு மற்றும் உதவிபெறும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அடுத்தடுத்து பயிற்சிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.



அக்டோபரில் மட்டும், பல நாட்கள் பயிற்சி நடத்தப்பட்டுள்ளன. இதில் ஒரே பள்ளியை சேர்ந்த 4 ஆசிரியர்கள் கூட ஒரே நாளில் பங்கேற்க வலியுறுத்தப்படுகிறது. பயிற்சி தேதிகளை முன்கூட்டியே முடிவு செய்யாமல் திட்ட இயக்குனர்களால் அறிவிப்பதே இப்பிரச்னைக்கு காரணம். இதனால் பாடம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளி துவங்கியது. இரண்டாம் பருவ பாடங்கள் நடத்தப்பட்ட நிலையில், ஆயுதபூஜை விடுமுறை வந்தன. அடுத்து எஸ்.எஸ்.ஏ., ஆர்.எம்.எஸ்.ஏ., பயிற்சிகள் என அடுத்தடுத்து ஐந்து நாட்கள் ஆசிரியர்களின் நேரம் பயிற்சியிலேயே கழிந்தன.இதனால் மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான பாடங்களை உரிய காலத்தில் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நவ., முதல் வாரத்திலும் இத்திட்டங்கள் மூலம் பயிற்சி வகுப்பு நடக்கவுள்ளது. இதிலும் ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும். இதனால் மாணவர்களுக்கு, மொத்தம் மொத்தமாக பாடம் நடத்த வேண்டியுள்ளது. இத்திட்டங்களின் இயக்குனர்கள், முன்கூட்டி திட்டமிட்டு பயிற்சி வகுப்புகளுக்கான தேதியை முடிவு செய்து அறிவித்தால், இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்றார்