தமிழக மாணவர்கள் ஐ.ஐ.டி.,யில் சேர வாய்ப்பு

பிளஸ் 2வில், 75 சதவீத மதிப்பெண் பெற்றால் மட்டுமே நுழைவுத்தேர்வு எழுத முடியும் என்பதால், தமிழக மாணவர்கள், ஐ.ஐ.டி.,யில் சேர பிரகாசமான வாய்ப்பு உருவாகியுள்ளது. 
பிளஸ் 2 முடித்தோர், மத்திய அரசின் உயர்கல்வி தொழில்நுட்ப நிறுவனமான, ஐ.ஐ.டி.,யில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, ஜே.இ.இ., என்ற ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இத்தேர்வுக்கு, பிளஸ் 2 தேர்ச்சி போதும் என்ற நிலை இருந்தது. இந்த ஆண்டு முதல், பிளஸ் 2வில், மொத்த மதிப்பெண்ணில், 75 சதவீதம் அல்லது அதிகபட்ச முதல் மதிப்பெண்ணில், 75 சதவீதம் எடுத்தால் மட்டுமே, ஜே.இ.இ., தேர்வை எழுத முடியும்.பொதுவாக, சி.பி.எஸ்.இ., மாணவர்களை விட, தமிழக சமச்சீர் கல்வி மாணவர்கள், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவது வழக்கம். 
எனவே, இந்த ஆண்டு அமலாகும் புதிய முறையால், தமிழக மாணவர்கள் பலர், ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று, பி.இ., - பி.டெக்., படிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு பள்ளி களிலும், மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.