எல்.கே.ஜி., அட்மிஷனா: ஜாதி சான்றிதழ் வாங்குங்கள்!

எல்.கே.ஜி., மாணவர் சேர்க்கை நடக்க உள்ளதால், ஜாதிச் சான்றிதழ் தயாராக வைத்திருக்க, பெற்றோர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். எல்.கே.ஜி., முதல், பிளஸ் 2 வரை, மாணவர்களை சேர்க்க, ஜாதிச் சான்றிதழ் முக்கிய ஆவணமாக பெறப்படுகிறது. பெரும்பாலான தனியார் பள்ளிகளில், அடுத்த மாதம் முதல், எல்.கே.ஜி., வகுப்புக்கான மாணவர் சேர்க்கை துவங்க உள்ளது.
பல பள்ளிகளில், விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு, பிரீ கே.ஜி., என்ற முன்பருவ மழலை வகுப்பில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்; இந்த மாணவர்களும் அடுத்து, எல்.கே.ஜி.,க்கு மாற்றப்படுவர். அப்போது, பிறப்புச் சான்றிதழுடன், ஜாதிச் சான்றிதழும் பள்ளிகளில் வழங்க வேண்டும். எனவே, ஜாதிச் சான்றிதழ் தற்போதே பெற்று, தயாராக வைத்திருக்க, பெற்றோர்களுக்கு, பள்ளிகள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தாசில்தார் அலுவலகங்களில், நேரடியாக ஜாதிச் சான்றிதழ் வழங்கப்படுவதில்லை. 'இ - சேவை' மையங்களில் மட்டுமே பதிவு செய்ய முடியும். எனவே, தற்போதே விண்ணப்பித்தால், எளிதில் சான்றிதழை பெற முடியும் என, பள்ளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.