'லீவு' எடுக்க தனியார் பள்ளிகளில் தடை

தனியார் பள்ளிகளில் படிக்கும், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களும், ஆசிரியர்களும், விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 10ம் வகுப்பில், 8.5 லட்சம் மாணவர்கள்; பிளஸ் 2 வகுப்பில், ஏழு லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும், காலாண்டு மற்றும்
அரையாண்டு தேர்வுகள், தேர்வுத்துறை தயாரித்த பொது வினாத்தாள் அடிப்படையில் நடத்தப்படுகின்றன. வரும் கல்வி ஆண்டில், மருத்துவ படிப்புகளில் சேர, 'நீட்' என்ற, தேசிய தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்திய உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., ஆகியவற்றில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, ஜே.இ.இ., எனும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு எழுத, பிளஸ் 2 தேர்வில் குறைந்தபட்சம், 75 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். அதனால், இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில், அதிக மதிப்பெண் பெற, தனியார் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி தரப்படுகிறது. எனவே, பிளஸ் 2 மாணவர்களும், அந்த வகுப்பு ஆசிரியர்களும் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 10ம் வகுப்பு தேர்விலும், அதிக தேர்ச்சி பெற வேண்டும் என, தனியார் பள்ளிகள் இலக்கு நிர்ணயித்துள்ளன. 10ம் வகுப்பு மாணவர்களுக்கும், சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதையடுத்து, 'ஞாயிறு தவிர, மற்ற நாட்களில் கண்டிப்பாக, பள்ளிக்கு வர வேண்டும்; தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் விடுமுறை நாட்கள் தவிர, மற்ற நாட்களில் சிறப்பு வகுப்புகளில், கட்டாயம் பங்கேற்க வேண்டும்' என, மாணவர்களுக்கு, தனியார் பள்ளி நிர்வாகத்தினர் அறிவுறுத்தியுள்ளனர். தேர்வு முடியும் வரை, ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கவும் தடை விதித்துள்ளனர்.