பட்டாசு வெடிப்பது எப்படி: மாணவர்களுக்கு அறிவுரை

'பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பதற்கான வழிமுறைகள் 
குறித்து, மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்' என, பள்ளிக் 
கல்வி இயக்குனர், கண்ணப்பன் கூறியுள்ளார்.

இதுகுறித்து, பள்ளிகளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: 
கவனக் குறைவாக பட்டாசு வெடிப்பதால், தீ விபத்து ஏற்பட்டு, 
உயிர் மற்றும் பொருள் சேதங்கள் ஏற்படுகின்றன. 
மாணவர்களுக்கு தீக்காயங்களும், சில நேரங்களில் 
பார்வை இழப்புகளும் ஏற்படுகின்றன.

எனவே, பட்டாசு வெடிக்கும் போது, பாதுகாப்பு விதிகளை 
கடைபிடிக்க வேண்டியது கடமை. பட்டாசு கொளுத்தும் போது,
 எளிதில் தீப்பற்றும் ஆடைகள் அணியக் கூடாது. ஒரு 
வாளியில் தண்ணீர் வைத்திருக்க வேண்டும். பட்டாசுகளை 
கையால் வெடிக்கக் கூடாது. 

கூட்டமான பகுதிகளிலும், தெருக்களிலும், சாலைகளிலும் 
பட்டாசு வெடிக்க வேண்டாம். பட்டாசு கடை, 
மருத்துவமனை, முதியவர்கள் அருகில் பட்டாசு வெடிக்கக்
 கூடாது. விலங்குகள் பயப்படும் வகையில், பட்டாசு வெடிக்கக் 
கூடாது. இரவு, 10:00 முதல் காலை, 6.00 மணி வரை
 பட்டாசு வெடிக்காதீர்கள். அதிக சத்தமான பட்டாசுகளை 
வெடித்தால், அவை உடலையும், மனநிலையையும் பாதிக்கும்; 
காதுகள் செவிடாகும் அபாயம் உள்ளது. பாதுகாப்பு 
விதிகளை மாணவர்கள் கடைபிடிக்க, பள்ளி பிரார்த்தனை 
கூட்டத்தில், ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு 
அதில் கூறப்பட்டுள்ளது.



'போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்' : மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: பட்டாசு வெடிக்கும் போது, அதன் ஒலி, 120 டெசிபல் அளவுக்குள் இருக்கும் வகையில், தயாரிக்க வேண்டும் என, பட்டாசு ஆலைகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதை மீறிய ஆலைகள் கண்டறியப்பட்டால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, இரவு, 10:00 மணியில் இருந்து, காலை, 6:00 மணி வரை, ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. உத்தரவை மீறுவோர் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் ஒலி, காற்று மாசு அதிகம் ஏற்படாத பட்டாசுகளை வெடித்து, சுற்றுச்சூழலை பாதிக்காத தீபாவளியை கொண்டாட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.