மழை வரும் ஆனா தீபாவளிக்கு முன்னாடி வராது

சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை பர்மா நோக்கி நகர
வாய்ப்பிருப்பதால் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ள தகவலின்படி, தமிழகத்துக்கு மிக அருகே வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை பர்மா நோக்கி நகர வாய்ப்பு உள்ளது. இதனால், வடகிழக்கு பருவ மழை தாமதமாகத் தொடங்கும் என்று முன்பு கணிக்கப்பட்டதில் எந்த மாற்றமும் இல்லை.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடற்கரைப் பகுதிகளில் மழை பெய்யும்.
அதே சமயம், தெற்கு தமிழகம் மற்றும் டெல்டா பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
ஆனால், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலைக்கும் இந்த மழைக்கும் தொடர்பிருக்காது. குறிப்பாக வடகிழக்குப் பருவ மழை தீபாவளிக்குப் பிறகுதான் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரம் முழுவதும் மழை இருக்காது.
கடந்த சில ஆண்டுகளோடு ஒப்பிடுகையில், வடகிழக்குப் பருவ மழை இந்த அளவுக்கு தாமதிப்பது இதுவே முதல்முறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.