நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 16-ம் தேதி தொடங்கும் என அறிவிப்பு

புதுதில்லி:
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 16-ம் தேதி தொடங்கும் என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மக்களவை செயலகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், '16-வது மக்களவையின் 10-வது அமர்வு நவம்பர் 16-ந் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. அரசின் அலுவல்களுக்கு உட்பட்டு இந்த அமர்வு டிசம்பர் 16-ந் தேதி நிறைவு பெற வாய்ப்பு உள்ளது' என்று கூறப்பட்டுள்ளது. இதைப்போன்ற ஒரு அறிவிப்பை மாநிலங்களவை செயலாளரும் வெளியிட்டு உள்ளார்.
ஒரு மாதம் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் உரி ராணுவ முகாம் தாக்குதல், அதைத்தொடர்ந்து பாகிஸ்தானில் இந்திய ராணுவம் மேற்கொண்ட 'சர்ஜிகல்' நடவடிக்கை உள்ளிட்ட விவகாரங்கள் முக்கிய இடம்பெறும் என தெரிகிறது.


மேலும் மத்திய ஜி.எஸ்.டி., ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. தொடர்பான மசோதாக்கள் உள்பட பல மசோதாக்களை இந்த தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.