எம்.பி.பி.எஸ்., 'அட்மிஷன்:' யு.ஜி.சி., எச்சரிக்கை

அனைத்து நிகர்நிலை மருத்துவ பல்கலைகளும், 'நீட்' மதிப்பெண்படியே, மாணவர்களை சேர்க்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., வெளியிட்டுள்ள எச்சரிக்கை: எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவ படிப்புக்கு, 'நீட்' எனும் தகுதித்தேர்வு நடத்தப்பட்டு உள்ளது; இதில் எடுத்த மதிப்பெண்படி, மாணவர் சேர்க்கை நடத்த, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிகர்நிலை மருத்துவ பல்கலைகளும், யு.ஜி.சி., யின் விதிகளை பின்பற்ற வேண்டும். இந்த பல்கலைகள், அந்தந்த மாநில பொது கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும். பொது கவுன்சிலிங் நடத்தப்படாவிட்டால், 'நீட்' தேர்வு அடிப்படை யில் தான், மாணவர்களை சேர்க்க வேண்டும்; அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, 'அட்மிஷன்' மறுக்கப்பட்டால், பல்கலை மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.