காதுகளில் குடைச்சலை ஏற்படுத்தும்
வாகனங்களின் இரைச்சலை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என களஆய்வு மூலம் கிராம
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர், மதுரை ஒத்தக்கடை அரசு
தொடக்கப் பள்ளி மாணவர்கள்.
இப்பள்ளி மேலுார் தேசிய நெடுஞ்சாலையையொட்டி
அமைந்துள்ளதால் வாகன இரைச்சல் ஒவ்வொரு நாளும் மாணவர்களுக்கு பெரும்
குடைச்சலாகி வருகிறது. இதற்கு ஏதாவது தீர்வு
ஏற்படுத்த வேண்டும் என தலைமை யாசிரியர் தென்னவன் தலைமையில் 15 மாணவர்கள் குழு களஆய்வில் ஈடுபட்டது.
முதற்கட்டமாக, எவ்வகை வாகனங்கள் இந்த
ரோட்டில் அதிகம் செல்கின்றன. எந்த வாகனங்களில் ஒலி மாசு ஏற்படும் வகையில்
சத்தம் காதை கிழிக்கிறது போன்ற விஷயங்களை சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில்
களஆய்வில் மாணவர்கள் ஈடுபட்டனர்.
இதில் ஒவ்வொரு வாகனங்களில் இருந்து வெளியாகும் ஒலியின் டெசிபல் அளவு கணக்கிடப்பட்டது.
பெரும்பாலான தனியார் பஸ்கள், வேன்களில் தான்
ஹாரன் சத்தம் அங்கீகரிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்தது. டூவீலர்களில்
காதுகளை குடையும் வகையிலும் விதவித ஹாரன் கருவிகள் பொருத்தப்பட்டதும்
கண்டுபிடிக்கப்பட்டது.
தலைமையாசிரியர் தென்னவன் கூறியதாவது: எங்கள்
பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னை அடிப்படையில் இக்கள ஆய்வு
நடத்தப்பட்டது. இந்த ரோடுகளில் செல்லும் வாகனங்களில் 80 முதல் 100 டெசிபல்
உள்ளதால் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது. இதில் அதிகபட்ச ஒலி மாசை
குறைக்கும் வகையில் ஊராட்சி நிர்வாகத்திற்கு சில பரிந்துரைகளை
தெரிவித்துள்ளோம்.
அதில், அதிக மரங்களை நடுவது, சத்தத்தை
கட்டுப்படுத்தும் தாவரங்களை வளர்ப்பது, ஒலித்தடை ஏற்படுத்தும் கட்டமைப்பு,
அருகில் செல்லும் இடங்களுக்கு வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது, பள்ளி
வேலை நாட்களில் ஊராட்சிக்குள் ஒலித்தடை ஏற்படுத்துவது போன்றவற்றை
வலியுறுத்தியுள்ளோம். மக்களிடையே இதுகுறித்து மாணவர்கள் மூலம்
விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறோம், என்றார்.